ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறை வீரர் சச்சித்ர சேனநாயக்கவிடம் இன்று நீண்ட விசாரணைகள் நடாத்தப்பட்டன.
அவர் தாக்கல் செய்த முன் பிணை கோரும் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சுகததாஸ விளையாட்டரங்கு கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள விளையாட்டு குற்றங்கள் தொடர்பிலான சிறப்பு பொலிஸ் விசாரணை பிரிவில் இன்று முற்பகல் சச்சித்திர ஆஜரானார்.
இந் நிலையில் அவரிடம் இன்று மாலை வரையான 8 மணிநேரத்திற்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் சச்சித்ரவிடம் விசாரித்து வாக்கு மூலம் பெற 3 தடவைகள் அழைக்கப்பட்டும் அவர் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்த நிலையிலேயே இன்று முதல் முறையாக விசாரணைகளுக்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.