பிற்போடப்பட்ட 2020 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பதற்கு ஜப்பான் மறுத்துள்ளது.
அதன்படி ஜப்பானுக்கு வெளியில் இருந்து வரும் பார்வையாளர்களை உள்வாங்காமல் இந்த கோடையில் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய செய்தித்தாளான மைனிச்சி புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்களின் கூற்றுப்படி, இந்த திட்டம் குறித்த இறுதி முடிவு இம் மாதத்திற்குள் எடுக்கப்படவுள்ளதுடன், இப் பிரச்சினை குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட பிற தொடர்புடைய அமைப்புகளுடன் ஜப்பானிய அரசாங்கம் கலந்துரையாடி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதையும் அதன் மாறுபட்ட விகாரங்களையும் சுற்றியுள்ள கவலைகள் காரணமாக, வெளிநாட்டு பார்வையாளர்களை ஒலிம்பிக் நிகழ்வுகளை பார்வையிட இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் உள்நாட்டு பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். மேலும் எத்தனை பேர் விளையாட்டுகளை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
ஆண்டின் தொடக்கத்திலிருந்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் ஜப்பானிய மற்றும் டோக்கியோ அரசாங்கங்களும் 2020 ஆம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளை இந்த ஆண்டின் கோடையில் நடத்தும் நோக்கத்தை வலியுறுத்தியுள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் முதலில் 2020 ஜூலை இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் அதே ஆண்டு மார்ச் மாதத்தில் தொற்றுநோய் உலக அளவில் பரவத் தொடங்கியமையினால் அது ஒத்திவைக்கப்பட்டது.
புதிய திகதிகளின்படி 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் வரை 08 ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதேவேளை பாராலிம்பிக் விளையாட்டுகள் ஆகஸ்ட் 24 முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும்.