14 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவரான மஹேந்திர சிங் தோனி சென்னை வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
14 ஆவது ஐ.பி.எல். தொடர் ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள போதிலும், மைதான விபரங்கள் மற்றும் ஆரம்பமாகும் திகதி குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் முற்கூட்டியே பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி நேற்று இரவு சென்னை சென்றுள்ளார்.
அவருடன், அம்பத்தி ராயுடு, ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோரும் இணைந்துள்ளனர். இவர்கள் 5 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்பட்டு, 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்த பிறகே ஹோட்டல் அறையில் இருந்துகூட அவர்களுக்கு வெளியேற முடியும். அதன் பிறகே பயிற்சிகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் இருவர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இம்முறை மேலதிக விழிப்புடன் செயற்பட அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.