மேற்கிந்தியத்தீவுகள் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியானது 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் களம் காணும் வீதி பாதுகாப்பு உலக இருபதுக்கு : 20 சம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
இதில் நேற்றிரவு ராஜ்பூர் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் பிரையன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் லெஜண்ட்ஸ் அணியினரும், திலகரத்ன டில்சான் தலைமையிலான இலங்கை லெஜண்ட் அணியினரும் மோதினர்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை குவித்தனர்.
மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் லாரா 49 பந்துகளில் 8 பவுண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களுடனும், டுவைன் ஸ்மித் 27 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களையும் அதிகடிபயாக பெற்றனர்.
158 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
அணி சார்பில் திலகரத்ன டில்சான் 37 பந்து வீச்சுகளில் 8 பவுண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களையும், உபுல் தரங்க 35 பந்து வீச்சுகளில் 8 பவுண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் 2021 உலக இருபதுக்கு : 20 சம்பியன்ஷிப் போட்டி புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேநேரம் இந்தியா முதலாவது இடத்திலும், தென்னாபிரிக்கா மூன்றாவது இடத்திலும், அவுஸ்திரேலியா நான்காவது இடத்திலும், மேற்கிந்தியத்தீவுகள் ஐந்தாவது இடத்திலும், பங்களாதேஷ் ஆறாவது இடத்திலும் உள்ளன.
இறுதி இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி இன்னும் எதிவித போட்டிகளையும் எதிர்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்கத்கது.