ஐ.பி.எல். தொடரில் ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி ஆறு ஓட்டங்களினால் திரில் வெற்றி பெற்றுள்ளது.
14 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆறாவது லீக் ஆட்டத்தில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
போட்டியில் ஐதராபாத் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பை தேர்வுசெய்ய, பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரர்களாக அணித் தலைவர் விராட்கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர்.
முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் வீசினார். அந்த ஓவரில் 2 ஆவது பந்தை விராட்கோலி பவுண்டரிக்கு விரட்டி ஓட்ட கணக்கை தொடங்கினார்.
அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய படிக்கல் 2.5 ஆவது ஓவரில் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் மொத்தமாக 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷபாஸ் அஹமட் அதிரடியாக ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். பவர்பிளேயான முதல் 6 ஓவரில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ஓட்டங்களை பெற்றது.
அதன் பின்னர் 6.1 ஆவது ஓவரில் ஷபாஸ் அஹமட் 14 ஓட்டங்களுடன் ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் ரஷித் கானிடம் பிடிகொடுத்தார். அடுத்து மெக்ஸ்வெல் களம் இறங்கினார்.
முதலில் நிதானத்தை கடைப்பிடித்த மெக்ஸ்வெல் 11 ஆவது ஓவரில் ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார்.
நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 33 ஓட்டங்களில் ஜோசன் ஹோல்டர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
சுழற்பந்து வீச்சில் கலக்கிய ரஷித் கான் தனது அடுத்தடுத்த ஓவர்களில் டிவில்லியர்ஸ் (1 ஓட்டம்), வொஷிங்டன் சுந்தர் (8 ஓட்டம்) விக்கெட்டை கைப்பற்றினார்.
அடுத்து வந்த டேன் கிறிஸ்டியன் ஒரு ஓட்டத்துடன் நடராஜன் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் விருத்திமான் சஹாவிடம் பிடி கொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
இறுதி கட்டத்தில் மெக்ஸ்வெல் அடித்த பவுண்டரி, சிக்ஸரால் அந்த அணி சற்று சவாலான ஓட்ட இலக்கை எட்டியது.
இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை குவித்தது.
மெக்ஸ்வேல் 20 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 59 ஓட்டங்களுடன் (41 பந்து, 3 சிக்ஸர், 5 பவுண்டரி) ஆட்டமிழக்க மறுபக்கம் ஹக்ஷர் படேல் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.
பின்னர் 150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா ஒரு ஓட்டத்துடன் மொஹமட் சிராஜின் பந்து வீச்சில் மெக்ஸ்வலிடம் பிடிகொடுத்தார்.
அடுத்து மனிஷ் பாண்டே டேவிட் வோர்னருடன் இணைந்து நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 13.2 ஓவரில் 96 ஆக இருந்த போது டேவிட் வோர்னர் 54 ஓட்டங்களில் (37 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) கைல் ஜோமிசன் பந்து வீச்சில் கிறிஸ்டியனிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.
அதன் பின்னர் 17 ஆவது ஓவரில் ஷபாஸ் அஹமட் தனது மாயாஜால சூழலில் ஜோனி பேர்ஸ்டோ (12 ஓட்டம்), மனிஷ் பாண்டே (38 ஓட்டம்) அப்துல் சமாத் (0) ஆகிய 3 விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் சாய்த்து திருப்புமுனை ஏற்படுத்தினார்.
அடுத்து வந்த விஜய் சங்கர் 3 ஓட்டங்களிலும், ஹோல்டர் 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இறுதி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசினார்.
அந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 9 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.
இறுதியாக ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ஒட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் பெங்களூரு அணி 6 ஓட்ட வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக மெக்ஸ்வேல் தெரிவானார்.
பெங்களூரு அணி தொடர்ச்சியாக பெற்ற 2 ஆவது வெற்றி இது என்பதுடன் ஐதராபாத் அணிக்கு இது 2 ஆவது தோல்வியாகும்.
Photo Credit ; IPL