சுனில் நரேனின் நான்கு விக்கெட்டுகள் மற்றும் அதிரடியான துடுப்பாட்டம் காரணமாக நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியை வெளியேற்றியுள்ளது கொல்கத்தா.
2021 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் வெளியேற்றல் சுற்று நேற்றிரவு சார்ஜாவில் நடைபெற்றது.
இதில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக விராட் கோஹ்லி 39 (33) ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் அசத்திய சுனில் நரேன் – விராட் கோஹ்லி, ஸ்ரீகர் பாரத், ஏ.பி.டிவில்லியர்ஸ் மற்றும் மெக்ஸ்வேல் என பெங்களூரு அணியின் முக்கிய விக்கெட்டுகளை கைபற்றினார்.
தனது பங்கிற்கு லோக்கி பெர்குசனும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
139 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
ஆரம்ப வீரராக களமிறங்கிய சுப்மான் கில் 29 ஓட்டத்துடனும், வெங்கடேஷ் அய்யர் 26 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 6 ஓட்டத்துடனும், நிதிஷ் ராணா 23 ஓட்டத்துடனும், சுனில் நரேன் 26 ஓட்டத்துடனும், தினேஷ் கார்த்திக் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இறுதியில் 7 ஆவது விக்கெட்டுக்காக இயன் மோர்கன் மற்றும் ஷகிப் அல்ஹசன் கைகோர்த்தாட 19.4 ஓவர்களில் 139 ஓட்டங்களை எடுத்து நான்கு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது கொல்கத்தா.
இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது.
இந்த சுற்றில் கொல்கத்தாக டெல்லி கேப்பிட்டல்ஸுடன் மோதும். இந்த ஆட்டம் நாளை சார்ஜாவில் நடைபெறும்.
Photo Credit ; IPL