Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை மணிவண்ணன் மேற்கொண்ட நடவடிக்கை சட்டத்திற்கு எதிரானதா?

மணிவண்ணன் மேற்கொண்ட நடவடிக்கை சட்டத்திற்கு எதிரானதா?

14 minutes read

யாழ்.மாநகரத்தினை தூய்மைப்படுத்தல் தொடர்பில் மாநகர முதல்வர் வி;.மணிவண்ணன் எடுத்த நடவடிக்கைகள் சில அண்மையில் பல சர்ச்சைகள், மற்றும் மாநகர சபையின் அதிகாரங்களை கேள்விக்குட்படுத்தும் பல வினாக்களை தோற்றுவித்தன

திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவம் என்பது பொதுவாக அனைத்து உள்ளுராட்சி மன்றங்களும் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சனை. அதற்கு யாழ்.மாநகர சபையும் விதிவிலக்கு அல்ல. அந்த வகையில் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளுராட்சி மன்றங்களுக்கு மட்டுமே உரித்தானவை. அவ் பொறுப்பினை உணர்ந்து யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை வினைத்திறனாக மேம்படுத்தும் நோக்குடன் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நடவடிக்கைளை மேற்கொண்டு வந்தார். அவ் திண்மக்கழிவகற்றல் பொறிமுறையின் ஒரு அங்கம் தான் யாழ்.மாநகரத்தின் தூய்மையைக் கண்காணித்தல் மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு உட்பட்ட குற்றங்களைப் புரிபவர்களுக்கான தண்டப்பணம் அறவீடு செய்தல், மாநகர மக்களுக்கு தூய்மை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல் போன்ற பணிகளுக்கான 5 பணியாளர்களின் நியமனம். பின்னர் அவர்களின் கடமைகள் தொடர்பிலும் அவர்கள் அணிந்த சீருடை தொடர்பிலும் பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டு இறுதியில் கைது செய்யும் வரையும் சென்றது.

குறித்த 5 பணியாளர்களின் நியமனம் மற்றும் கடமைக்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. இவர்களின் நியமனம் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது. உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, மற்றும் மாநகர சபைக்கு தண்டப்பணம் அறிவிடுவதற்கு அதிகாரம் இல்லை போன்ற பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. உண்மையில் என்ன நடந்தது? தண்டப்பணம் அறிவிடுவதற்கு எமக்கு அதிகாரம் இருக்கின்றதா இல்லையா? இது யாழ்.மாநகர சபையில் ஓர் புதிய விடயமா? போன்ற வினாக்களுக்கான விடையாகவே இக் கட்டுரை அமையும். நான் ஒரு நிர்வாகத் துறை சார்ந்த சேவையாளன் அல்ல. நிர்வாக நடைமுறைகள் தொடர்பாக கற்றிந்தவனும் இல்லை. நான் சாதாரண யாழ்.மாநகர சபை உறுப்பினர் மாத்திரமே. இருந்த போதும் எனக்கு தெரிந்தவற்றை கொண்டு இவற்றுக்கு விடையளிக்கின்றேன்.

என்ன நடந்தது?

👍 சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தண்டப்பணத்தினை நிர்ணயம் செய்தல்

•22.01.2021 ஆம் திகதி அன்று நடைபெற்ற முதலாவது நிதிக்குழுக்கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான மாநகர சபையின் கட்டண அறவீடுகளை வர்த்தகமானியில் பிரசுரிப்பது தொடர்பாக பரிசீலினை செய்யப்பட்டது. அக் கூட்டத்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டுதல், எச்சில் துப்புதல் மற்றும் முறையற்ற வாகனத்தரிப்புக்கள் உட்பட பல சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தண்டம் அறிவிடுவது தொடர்பாகவும் பரிசீலிக்கப்பட்டது. அவற்றை பரிசீலனை செய்த குழு சபையால் ஏற்கனவே அறவிடப்படும் அறவீடுகளுடன் மேற்குறித்த அறவீடுகளையும் உள்ளடக்கி 2021 ஆம் ஆண்டில் அறவிடுவதற்கு வர்த்தமானியில் பிரசுரிப்பதை அங்கீகரிப்பதென சிபாரிசு செய்தது. (பார்க்க: இணைப்பு ‘அ’ – நிதிக்குழு கூட்ட அறிக்கை பக்கம் : 6 விடயம் : 9 )

•22.01.2021 ஆம் திகதிய இந் நிதிக்குழுவின் சிபார்சுகள் 16.02.2021 அன்று நடைறெ;ற மாதாந்த பொதுக்கூட்டத்தில் பரிசீனைக்கு எடுக்கப்பட்டது. வாகன தரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பின்னரே முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்தினால் தண்டம் அறிவிடப்பட வேண்டும் என்றும்; ‘பொது இடங்களில் துப்புதல்’ என்பது ‘பொது இடங்களில் வெற்றிலை எச்சில் துப்புதல்’ என திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற திருத்தங்களுடன் சகல விடயங்களையும் வர்த்தமானியில் பிரசுரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. (பார்க்க: இணைப்பு: ‘ஆ’– மாதாந்த பொதுக் கூட்டஅறிக்கை பக்கம் : 7 பந்தி : 2)

அந்த வகையில் தண்டம் அறிவிடுவது தொடர்பான 22.01.2021 திகதி நிதிக்குழுக் கூட்டத்தின் பரிந்துரைகள் 16.02.2021 ஆம் திகதிய மாதாந்த பொதுக்கூட்டத்தில் திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டு வர்த்தகமானியில் வெளியீடு செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு உரிய அனுமதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட தண்டப்பணம் மற்றும் கட்டண அறவீட்டு விபரங்கள் 26.03.2021 ஆம் திகதிய அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

👍சட்டவிரோத செயற்பாடுகளுக்கான தண்டப்பணம் அறவிடுவதற்கான ஆளணி நியமனம்

• 08-02-2021 ஆம் திகதி நடைபெற்ற நிதிக்குழு கூட்டத்தில் தண்டப்பணம் அறிவிடுகின்ற பணியாளர்களை நியமனம் செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது. இது தொடர்பான விடயம் அக் கூட்டத்தின் அறிக்கையின் 6 ஆம் பக்கத்தில் இலக்கம் நான்கில் உள்ளது அது என்னவெனில்
‘மாநகரசபை பகுதியில் அத்துமீறிய செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய ஆளணியை நியமிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது.

கருத்து தெரிவித்த கௌரவ முதல்வர் அவர்கள் மாநகரசபை பகுதியில் சட்ட விரோதமாக குப்பை கொட்டுபவர்கள், வீதிகளை அசுத்தப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் தவறான வாகனத் தரிப்புக்களை மேற்கொள்பவர்கள் ஆகியோரிடம் தண்டம் அறவிடுவதற்கு 05பேரை கடமைக்கு அமர்த்த வேண்டும். பணம் அறவிடும் முறையினை மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை பரிசீலனை செய்த குழு மேற்படி வேலைத்திட்டத்திற்காக சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் தேவைக்கேற்ற அடிப்படையில் கடமை புரிபவர்களில் க.பொ.த.உயர்தரத்தில் சித்தியடைந்த 05 பேரை தெரிவு செய்து பிரதம இறைவரிப் பரிசோதகரின் கண்காணிப்பின் கீழ் கடமைக்கு அமர்த்துவது எனவும் தண்டப்பணம் அறவிடும் முறையை மாற்றம் செய்வது எனவும் சிபாரிசு செய்தது.’ என்றுள்ளது.

• 01-03-2021 அன்று நடைபெற்ற 3வது நிதிக்குழு கூட்டத்தில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சீருடை மற்றும் பற்றுசீட்டு இயந்த்திரக் கொள்வனவு தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது. அது தொடர்பான விபரம் அக் கூட்ட அறிக்கையின் 5 ஆம் பக்கத்தில் இலக்கம் 7 இலக்கம் 8 என்பவனவற்றில் காணப்படுகின்றது. அது என்னவெனில்

‘மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு தண்டம் அறவிடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட ஊழியர்கள் 5 பேருக்கும் சீருடை வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த குழு ஒருவருக்கு ரூபா 10000.00 இற்கு உட்பட்ட வகையில் இரண்டு சீருடைகள், தொப்பி, சப்பாத்து என்பவற்றினை கொள்வனவு செய்து வழங்குவது என சிபாரிசு செய்தது.

மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத செயல்களுக்கு தண்டம் அறவிடும் செயன்முறைக்கான பற்றுச்சீட்டினை அச்சிடும் இயந்திரம் கொள்வனவு செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டது.
இதனை பரிசீலனை செய்த குழு தண்டம் அறவிடும் செயன்முறைக்கான பற்றுச்சீட்டினை அச்சிடும்; இயந்திரத்தை கேள்வி கோரல் மூலம் கொள்வனவு செய்வதென சிபாரிசு செய்தது.’ என்றுள்ளது

ஊழியர்கள் நியமனம், ஊழியர்களுக்கான சீருடை மற்றும் பற்றுசீட்டு இயந்திரங்கள் தொடர்பான 08-02-2021, 01-03.2021 ஆம் திகதி நிதிக்குழுவின் பரிந்துரைகள் 09-03-2021 ஆம் திகதி மாதாந்த பொதுக்கூட்டத்தில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

மேலே கூறப்பட்ட விடயங்களின் அடிப்படையில் தண்டப்பணம், ஊழியர்களின் நியமனம், அவர்களின் கடமைகள், சீருடை, மற்றும் பற்றுச்சீட்டு இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு உரிய அனுமதிகள் பெறப்பட்டன என்பது வெளிப்படை.

👍யாழ்.மாநகர சபையின் தண்டப்பணம் அறவிடும் நடைமுறை புதிய நடைமுறையா?
தண்டப்பணம் அறிடும் பணியாளர்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து மாநகர சபைக்கு தண்டப்பணம் அறிவிடும் அதிகாரம் இல்லை என்றும் சட்டவிரோதமாக குப்பை போடுபவர்களிடம் இருந்து இவ் தண்டப்பணம் அறிவிடும் நடவடிக்கை இவ்வாண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது போலவும் மாநகர முதல்வர் மணிவண்ணன் ஒரு பிழையான நடைமுறையை அறிமுகப்படுத்pயிருப்பதாகவும் ஒரு சிலரது விமர்சனங்கள் எழுந்தன.

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோமாக குப்பை போடுபவாகளிடம் இருந்து தண்டம் அறவீடு செய்கின்ற நடவடிக்கை கடந்த பல ஆண்டுகாலமாக யாழ்.மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனைக் கண்காணிப்பதற்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் பொது இடங்களில் குப்பை போடுபவர்கள் சிக்கிக் கொண்டால்

  1. அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவ்விடத்தில் வைத்தே குற்றப்பணம் ஊளியர்களால் அறிவிடப்பட்டு அதற்குரிய பற்றுச்சீட்டு வழங்கப்படும். (பார்க்க: இணைப்பு: ‘இ’– மாநகர சபையால் வழங்கப்படும் அபராதத்திற்குரிய பற்றுச்சீட்டு)
  2. அவர்கள் குற்றத்தை ஒப்புகொள்ளாமல் விட்டால் சுகாதார வைத்திய அதிகாரி மூலம் அவர்கள் மீது நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.

குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவ்விடத்தில் வைத்தே குற்றப்பணம் அறவிடப்படும் என்ற நடைமுறை மூலம் 2017 இல் 57,600 ரூபாவும் 2018 இல் 56,085 ரூபாவும் 2019 இல் 62,000 ரூபாவும் 2020 இல் 18,000 ரூபாவும் தண்டப்பணம் (நீதிமன்ற நடவடிக்கைள் அல்லாமல்) யாழ்.மாநகர சபைக்கு கடந்த காலங்களில் வருமானமாக கிடைக்கப்பெற்றது.
ஆக யாழ்.மாநகர சபையில் இது ஒரு புதிய நடைமுறை அல்ல.

👍2021 இவ் விடயம் தொடர்பில் மாநகர முதல்வர் எதைச் செய்தார் ஏன் செய்தார்.

  1. என்னதான் ஒரு முறையான வினைத்திறன் மிக்க திண்மக்கழிவகற்றல் பொறிமுறை உருவாக்கப்பட்டாலும் மாநகரத்தின் தூய்மைப் பேணுவதற்கும் மாநகர மக்களுக்கு ஒரு பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இவ்வாறான தண்டஅறவீடுகள் முக்கியமானவை
    2020 ஆண்டு கௌரவ ஆனோல்ட் முதல்வராக இருந்த போது அவரின் அனுமதியுடன் வெளியீடு செய்யப்பட்ட வர்த்தமானயில் அனுமதியின்றி வீதியோராங்களில் குப்பை கொட்டுவதற்கான தண்டம் 2000 ரூபாவாக காணப்பட்டது. அதனை மாநகர முதல்வர் மணிவண்ணன் 5000 ரூபா என்று முறையான அனுமதிகளுடன் அதிகரித்ததுடன் வேறு சில தண்டப்பண விடயங்களையும் சேர்த்தார்.
  2. கடந்த காலங்களில் இவ் தண்டப்பணம் அறிவீடு செய்பவர்கள் முறைப்படி தங்களை அடையாளப்படுத்துவதற்குரிய சீருடைகள் எதுவும் இன்மையால் மக்கள் இலகுவில் அவர்களை அடையாளம் காணுவதில் பல பிரச்சனைகள் எழுந்தன. சில இடங்களில் அது கைகலப்பாக மாறி எமது ஊளியர்கள் தாக்கப்பட்டு வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டதும் அவ்விவகாரம் நீதிமன்றம் வரைக்கும் செல்லும் நிலைமைகளும் ஏற்பட்டது. இதை விட மிக முக்கியமானதாக எமது ஊழியர்களுக்கு சீருடை இல்லாத காரணத்தைக் கொண்டு வேறு சில பொது நபர்களும் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபட்டனர் என்றும் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் மாநகர முதல்வர் அவர்களுக்கு சீருடை மற்றும் அடையாள அட்டைகளை வழங்கி அப் நடவடிக்கையினை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார். அத்துடன் தண்டம் அறவீடு செய்யும் போது வழங்கப்படும் பற்றுச்சீட்டினை முன்புபோல் அல்லாமல் நவீன முறையில் கணணி மயப்படுத்தப்பட்டு புதிய மென்பொருள் ஒன்றினூடாக பற்றுசீட்டு இயந்திரத்தின் மூலம் வழங்குவதற்கும் நடைவடிக்கை எடுத்தார்.

இவற்றின் மூலம் தண்டப்பணம் அறவிடும் முறைமை மாநகர முதல்வரால் புதிதாக அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதும் மாநகர முதல்வர் இவ் முறைமையை முறையாக ஒழுங்குபடுத்தி நவீனமுறையில் வினைத்திறனாக செயற்படுதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்தினார் என்பது தெளிவு.

👍பொதுச் சுகாதாரத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் பங்கு

மாநகர சபை, நகர நபை பிரதேச சபை போன்ற ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களும் தனது அதிகாரப் பிரதேசத்தில் பொதுச் சுகாதாரத்தை விருத்தி செய்வதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் செயலாற்றுகின்ற பொதுவான நிருவாக அதிகார சபையாகும். அதனை மாநகர கட்டளைச் சட்டத்தின் 96 வது பிரிவு கூறுகின்றது

Municipal Council to be general public health authority
Subject to the powers and responsibilities by law committed to any other authority, the Municipal Council of each Municipality shall be the general administrative authority for the purpose of promoting and securing the public health within the Municipality, and shall for that purpose be entitled to exercise all such powers as are vested in it by this Ordinance, the Nuisances Ordinance, the Housing and Town Improvement Ordinance, and any other written law for the time being in force in that behalf.
(பார்க்க: இணைப்பு: ‘ஈ’– மாநகர கட்டளைச் சட்டம் 96 பக்கம் : XVIII/27)

மாநகராட்சி மன்றம் பொது சுகாதார அதிகார சபையாக தொழிற்படும் ஒவ்வொரு நகராட்சியின் நகராட்சி மன்றமும் நகராட்சிக்குள் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான பொது நிர்வாக அதிகாரியாக இருக்கும், மேலும் அந்த நோக்கத்திற்காக அனைத்தையும் பயன்படுத்த உரிமை உண்டு. மாநகர கட்டளைச் சட்டத்திற்கு மேலதிகமாக தொந்தரவுகள் பற்றிய கட்டளைச்சட்டம், வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்திக் கட்டளைச் சட்டங்கள் மூலம் மேலும் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் மாநகர சபை பொதுச்சுகாதாரம் தொடர்பில் அதனை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்ககூடிய ஒரு அதிகார அலகு.

👍 மாநகர சபைக்கு தண்டப்பணம் அதிகாரம் உள்ளதா?

மாநகர கட்டளைச்சட்டத்தின் 306 (1), (2) கூறுகின்றது
மாநகர முதல்வருக்கு ஒரு தொல்லை இருப்பதாக எந்த நபரும் புகார் செய்தால் அவ்வாறு செய்த புகாரை விசாரிப்பதற்கும் மேலும் இது போன்ற தொல்லைகளை தணிக்க அல்லது சரி செய்ய உத்தரவிடலாம். என்று கூறுகின்றது. அத்துடன் கவுன்சில் எந்தவொரு தொல்லைக்கும் எந்தவொரு சட்ட நடவடிக்கை மற்றும் வழக்குத் தொடரலாம், வேறு ஏதேனும் அபராதம் மற்றும் அபராதங்களை விதிப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடலாம் என்று கூறுகின்றது.
(பார்க்க: இணைப்பு: ‘ஈ’– மாநகர கட்டளைச்சட்டம் (துணைச்சட்டம்) 306 பக்கம்: XVIII/91)

ஆக மாநகர கட்டளைச் சட்டத்தில் 96 ஆம் பிரிவு தெளிவாக கூறுகின்றது மாநகர சபை பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான நிர்வாக அதிகாரியாக இருக்கும். அதற்காக அனைத்தையும் பயன்படுத்த உரிமையுண்டு என்று

மாநகர கட்டளைச் சட்டம் 306 (2) இன் பிரகாரம் மக்களுக்கு ஏற்படுகின்ற ஒரு தொல்லையினை தணிப்பதற்கு அல்லது அதனை சரி செய்வதற்கு உத்தரவிடலாம்

306 (1) இன் பிரகாரம் அவ்வான தொல்லைகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கலாம் வழக்கு தொடரலாம் அல்லது வேறு எதுவும் அபராதம் அபராதங்களை விதிக்கலாம்.

அதே போல் மாநகர கட்டளைச்சட்டம் 267 கூறுவதன் அடிப்படையில் மாநகராட்சி மன்றத்தால் செய்யப்பட்ட ஒரு சட்டத்தின் ஒவ்வொரு மீறலும் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும். அக் குற்றங்களுக்கு முதல் குற்றத்திற்கு இரண்டாம் குற்றத்திற்கு என்று அபராதங்கள் விதிக்க முடியும்.

இதை விட முக்கியமாக மாநகர கட்டளைச்சட்டம் 96 கூறுகின்றது மாநகர கட்டளைச்சட்டத்திற்கு மேலதிகமாக வேறு சில கட்டளைச் சட்டங்களும் மாநகர சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குகின்றது என்று அதில் ஒன்று தொல்லைகள் பற்றிய கட்டளைச்சட்டம். அக் கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவு ‘ உள்ளுராட்சி மன்றங்கள் எந்த ஒரு தொலையையும் இல்லாமல் செய்வதற்கு எந்த ஒரு தண்டத்தையும் அறவிடலாம் என்று கூறுகின்றது
(பார்க்க: இணைப்பு: ‘உ’– தொல்லைகள் பற்றிய கட்டளைச் சட்டம் பி;ரிவு : 12)

ஆக மேற்குறிப்பிட்ட சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு பொதுச்சுகாதாரத்தின் மேம்படுத்துவதற்கும் அதனை பாதுகாப்பதற்கும் பொதுமக்களுக்கு தொல்லை தருகின்ற விடயங்களுக்கு அபராதம் விதிக்கலாம்.

மாநகர கட்டளைச்சட்டம் 158 படி மாநகர சபையின் அனுமதி இல்லாமல் சட்டவிரோத விற்பனை நிலையங்களுக்கு தண்டம் விதிக்க முடியும்.
(பார்க்க: இணைப்பு: ‘ஊ’– மாநகர கட்டளைச்சட்டம் 158 பக்கம்: XVIII/44)

👍 விமர்சனங்கள்

இவ்வாறு யாழ்.மாநகர சபை தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அதன் பொதுச் சுகாதாரத்தைப் பேணவதற்கும் பாதுகாப்பதற்கும் எடுத்த நடவடிக்கை தொடர்பில் பலர் பல்வேறு கோணத்தில் பதிவுகளை இட்டனர். அதில் ஒருசாரார் மாநகரத்தின் தூய்மையைப் பேணுவதற்கு முதல்வர் மேற்கொண்ட இவ் நடவடிக்கை நல்ல விடயம் என்று பாராட்டினார்கள். இன்னொரு சாரார் இதனை முன்னைய ஒரு விடயத்துடன் தொடர்புபடுத்தி மாநகர சபை கண்காணிப்பு பணியாளர்களின் புகைப்படங்களைப் போலான முந்திய காலப் படங்களைத் தேடிப்பிடித்து அவ்விரு படங்களையும் அருகருகே பதிவிட்டு மாநகர முதல்வர் முந்திய ஒரு விடயத்தினை கேவலப்படுத்தி விட்டாதாக விமர்சனம் செய்து பதிவிட்டனர். அடுத்ததாக தென்னிலங்கை மாநகர முதல்வர் பெரிய பொலிஸ்படையை அமைத்து விட்டதாக கிளர்ந்தெழுந்தெழுந்தது. இறுதியாக கூறிய இரண்டு தரப்பினரினதும் சிந்தனைகள் வித்தியாசமாக இருந்தாலும் மாநகர முதல்வர் மேற்கொண்ட இந் நடவடிக்கையை முடக்க வேண்டும் என்ற அவர்களது நோக்கம் ஒன்றாகவே காணப்பட்டது.

எங்களுடைய பணியாளர்களையும் காவல்துறையின் படங்களையும் அருகருகே போட்;டு தமிழ்த்தேசியத்தை கேவலப்படு;தி விட்டார்கள். அவர்களை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று தாமே தேசியத்தின் காவலர்களாக அவர்கள் இட்ட முகப்பு புத்த பதிவுகளே எங்கள் மீது பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது காட்டப்பட்டன. அதில் எமது கட்சி சார்ந்த இரண்டு மூன்று பாராளுமன்ற வேட்பாளர்களின் முகப்பு பக்க பதிவுகளும் அடங்கும். அது பற்றியும் விசாரணைகள் பற்றியும் விரிவாக எழுதி வேறு ஒரு தளத்திற்குள் சென்று நானும் ஒரு விமர்சன அரசியலை முன்னெடுக்க விரும்பவில்லை.

இது ஒரு பக்கம் இருக்க மாநகர சபைக்கு தண்டம் அறவிடும் அதிகாரம் இல்லை என்றும் ஒரு தவறான நடைமுறையை மாநகர முதல்வர் செய்து விட்டார் என்றும் இவ்வாறு பிழையாக முறையற்று நடந்ததன் காரணமாக மாகாண சபைகளுக்கு எனி அதிகாரங்களை குறிப்பாக பொலிஸ் அதிகாரங்களை தரமாட்டார்கள் என்றும் இது மிகவம் ஆபத்தான விடயம் என்றும் பத்திரிகை மாநாடுகளும் வைத்தார்கள்.

தமிழர்களுக்கான அதிகாரங்களை தமிழர்கள் தமக்கே உரித்தான ஆளுமையுடன் செய்கின்ற போது அல்லது செய்ய முனைகின்ற போது தமிழர்களில் ஒரு சிலர், சில விடயங்களை – சில விடயங்களுடன் ஒப்பிட்டு, அதுவே இது, இதன் மூலம் தமிழ்த்தேசியம் கலங்கப்பட்டு விட்டது என்று விமர்சனம் செய்வதும் அந்த அதிகாரங்களை கேள்விக்குட்படுத்துவதும் தான் வேதனையான விடயம்.

மாநகர முதல்வர் மாநகரத்தின் தூய்மைக்கு என ஒரு விடயத்தினைச் செய்ய முன்னையும் போது அதன் மூலம் மாகாண சபையின் அதிகாரங்கள் பறிக்கப்படும் குறைக்கப்படும் என்று அதன் ஆபத்துக்களை பட்டியலிடுவோர் அவ் மாகாணசபை காலத்தில் மாகாணசபைக்கு இருக்கின்ற அதிகாரங்களையாவது முழுமையாக பயன்படுத்தினார்களா என்பதற்கும் மாநகர முதல்வர் எடுத்த முயற்சியால் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் கிடைக்காது என்று கூறுபவர்கள் தங்களுடைய மாகாண சபை காலத்தில் இப் பொலிஸ் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ள என்ன என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதற்கும் பதில் அளிக்க வேண்டும்.

தேர்தல் காலங்களில் நாம் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று கூறிக்கொண்டு உள்ளுராட்சி மன்றங்களையும் மாகாண சபைகளையும் கைப்பற்றி விட்டு அவற்றுக்கு இருக்கின்ற கொஞ்ச அதிகாரங்களையும் அதன் உச்சம் தொட்டு செய்து காட்டுவது அல்லது செய்து காட்ட முனைவது தமிழரின் நிர்வாக ஆளுமையைப் பறைசாற்றுமா?

அல்லது இருக்கின்ற அந்த கொஞ்ச அதிகாரங்களையும் எமக்கிடையிலான அரசியல் காழ்புணர்ச்சிகளுக்காகவும், தனிநபர் மீதுள்ள விருப்பு வெறுப்புக்களுக்காகவும், நாமே அதனை மாறி மாறி விமர்சனம் செய்வதும், அவ் அதிகாரங்களை கேள்விக்குட்படுத்துவதும்,
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் பரப்புரையின் போது பல லட்சம் ரூபாக்களைச் செலவு செய்து, பலரை விமர்சனம் செய்து, நாம் தேர்தலில் வென்றால், மக்களுக்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கூறி, தேர்தலில் வாக்கு கேட்டுவிட்டு, அத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்றதோடு மட்டுமின்றி, பல உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்ற முனைந்து விட்டு தற்போது நாங்கள் பட்டுவேட்டிக்கு ஆசைப்படுகின்றோம் இந்த குப்பை அள்ளுகின்ற பதவிகள் எமக்கு தேவையில்லை என்று பொறுப்பற்று நடப்பது தான் தமிழரின் நிர்வாக ஆளுமையை பறைசாற்றுமா?

அரசியலில் விமர்சனங்கள் ஆக்கபூரவமானது. அவசியமானது. ஆனால் எல்லாவற்றையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் ஏதேதோ காரணங்களை முன்வைத்து விமர்சனம் மட்டுமே செய்வது அருவருக்கத்தக்கது. இவ் வகையான விமர்சன அரசியல் தமிழ்மக்களுக்கு எதுவித விமோசனத்தையும் தரவல்லது அல்ல. ஆக எமக்கிடையிலான அரசியல் மற்றும் தனிநபர் காழ்புணர்ச்சிகளை இனநலனுக்காக துறந்து ஒன்று பட்டு எமக்கான அரசியல் உரிமைகளையும் இருக்கின்ற அதிகாரங்களையும் அதன் உச்சம் தொட்டுக்கொண்டு அதில் தமிழர் தம் நிர்வாக ஆளுமையைப் பாறைசாற்றிக் கொண்டு எம்மை நாமே ஆள தனித்துவமான தமிழ்த்;தேசம் என்ற தேச அங்கீகாரத்திற்கான இலக்கு நோக்கி ஒரே தமிழர் சக்தியாக ஒற்றுமையாக மேலெழுந்து பயணிப்பதே சிறப்பானதும் அவசியமானதும்.

வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More