Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை எப்படி இருந்தது வாழ்வு? | க. பத்திநாதன்

எப்படி இருந்தது வாழ்வு? | க. பத்திநாதன்

6 minutes read
தமிழர் வாழ்வியல்

சூரியன் வர முதலே அம்மா வந்து எழுப்புவாவு? எழும்பின உடனே சுட வச்ச உப்புத்தண்ணி இருக்கும். அதுதான் இப்பத்தைய மவுத் வொஸ் (mouth wash) அத எடுத்து வாயக்கொப்பளிச்சிட்டு கமகமெண்டு மணக்குற தேத்தண்ணியக் குடிச்சா சும்மா சூட்டக்கிழப்பி நெஞ்ச எரிச்சித்துப் போகும்.

காரணம் அம்மா தேத்தண்ணிக்க போட்ட நன்னாரி வேர். வெனிலாவும் தோத்துப் போகும். இனி அப்படியே எழும்பி பக்கத்து வீட்டு நண்பர்களோட சேர்ந்து வெம்புக் காட்டுக்க போய்ப் பார்த்து, அவரவருக்கு விருப்பமான வேம்புக் கந்த உடச்செடுத்து அத பல்லாலையே கடிச்சி இழைகள் உண்டாக்கி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பக்கமிருந்து பல்லத்தீட்டுவம். பல்லுல இருக்குற சிலும்பலெல்லாம் சும்மா அப்படி சேர்ந்து வரும் துப்பக்குள்ள. வேம்புச்சுவை அப்படியே வாய்க்க துப்பலோட கலந்து ஊறித்து நிக்கும். கம்ப கீழ போட்டாலும் எந்த பிரச்சினையும் இல்ல ஆனா இப்ப? எல்லாம் பிளாஸ்ரிக். எல்லாத்துக்கும் பிரச்சினை.


அப்படி இல்லாட்டி சில நேரம் அம்மா அடுப்புச் சாம்பலும், கரித்துண்டும் வச்சிருப்பாவு. எடுத்து வளவுக்க நிண்டே பல்லத்தீட்டினா அப்பிடியே பளபளக்கும் பல்லு. அதத்தான் இப்ப வார எல்லா பற்பசையிலும் சேக்குறாங்க. கரி எண்டால் கூடாது ஆனா Charcoal போட்ட Soult பற்பசை எண்டால் நல்லது. உயர் தரமான தயாரிப்பு. பல்லத் தீட்டித்து(துலக்குதல்) வாய்க்காலுக்க குளிக்கப் போனால், சில நேரம் சோப் இருக்காது. அதுவும் நாங்க போடுறது சன்லைட் சோப் தான். ஆனா சல்லைட் சல்லைட் எண்டுதான் நாங்க சொல்லுற. அதுவும் முருகன் கோயில் (கோயிலுக்குப் பக்கத்துல இருக்றதால இந்த பேர்) கடையில நூல்ல போட்டு வெட்டித் தருவாங்க கால்கட்டி. நல்லா தேசிக்காய் மணக்கும். அது சின்னக் கடதான் ஆனா எங்கள்ட இரிக்கிற காசிக்கு அங்க மட்டும் சாமான் தாரளமா வாங்குவம். வசதிக்கேத்த வாழ்வாதாரக்கடைகள் அது.

பார் சோப்

இப்ப எங்க அதெல்லாம். சன்லைட் சோப் இல்லாட்டி வார் சோப். சும்மா ஒரடிக்கு மேல இரிக்கும் நீண்டு. அதுவும் வாங்க ஏலாட்டி வெச்சிருப்பாவு அம்மம்மா சாமான். ராவு பாணிக்கி புழிஞ்ச பனங்கொட்ட. அத போட்டு தேய் தேய் எண்டு தேச்சா நுர அப்படி வரும். இருந்தாலும் சல்லைட் விளம்பரம் இடைக்கிடைக்க வந்துதான் போகும். அப்டியே குளிச்சிட்டு வந்தால் அம்மா தண்ணிச்சோறு கரையல் செஞ்சித்து இருப்பாவு. பழம், பால், முந்திரியங்கொட்ட எல்லாம் போட்டு கரைக்குற கரையல் இருக்கே சும்மா அப்படி இரிக்கும். பள்ளிக்கூடம் விட்டு வரும் வரைக்கும் பசிக்காது. அப்படியொரு சாப்பாடு. (இப்பெல்லாம் அதுதானே குடல் புண்ணுக்கு மருந்து.) ஆனா எனக்கு அத எந்த நாளும் சாப்புடுறது ஒத்துவாரல்ல. அதால எனக்கு மட்டும் அம்மா நல்லா வெயில்ல காயவச்ச மங்குக் கருவாட்ட (மீனின் சிறிய பருவம்) அடுப்புக்கரிக்க போட்டு சுட்டுத்தருவாவு. கமகம எண்டு கருவாடு மணக்கும். அதோட சேர்த்து சின்ன வெங்காயம், வாழ கொச்சிக்கா, தேங்காப்பூ கொஞ்சம் இருக்கும். அத எல்லாத்தையும் சேர்த்து உப்பையும் ஊத்தி சாப்பிடுற சுவையிருக்குதே இத நினைச்சு நினைச்சுப் பார்த்து type பண்ணக்குள்ளையே வாயூறுது. இப்ப இதச்செய்யத்தான் மெசின் கண்டு பிடிச்சி அதுக்கு கரியும் வேறையா தயாரிக்கிறாங்க. நினைச்சா?

சில நேரம் பழஞ்சோறு மிச்சமாகிடும். அத அம்மம்மா வெயில்ல காய வச்சு பின்நேரத்துல அத சின்ன உரலுக்க போட்டு இடிச்சி அதோட தேங்காப்பூ, குரக்கன் மாவு எல்லாம் போட்டு பிரட்டி உருண்ட உருண்டையா புடிச்சி ஆளுக்கொண்டாத் தருவாவு. சாப்பிட்டா அதுட ருசிய எப்படிச் சொல்றது. இப்ப கிலோக் கிலோவா குப்பையில கிடக்குத் தண்ணிச்சோறு. சில நேரம் காலச்சாப்பாடு இலக்கஞ்சி தான். முருங்க இல, காணாந்தி இல, முஸ்ட இல, முல்ல இல, கார இல, பொன்னாங் கன்னி இல, தேங்காப் பால் போட்டு செய்து தருவாங்க அதக் குடிச்சாலே போதும். அம்மம்மாட்ட இப்படி பல item இருக்கும்.

தேங்காய் எண்ணெய் எல்லாம் வீட்டுலதான் உருக்குறது. பால் வத்தி அப்படியே உருண்டக் கட்டியா இருக்குற தேங்காய சின்னச் சின்னத்துண்டா வெட்டி அத வெயில்ல காசய வச்சி புறகு அத இன்னும் பொடியாக்கி அம்மம்மா ஒரு தாச்சில போட்டு பதத்திற்கு உருக்குவாவு தேங்கா எண்ணெய் ரெடியா வந்த புறகு எண்ணச் சக்கையா ஒரு item வரும் அது தாற வாசன இருக்கே அடுத்த சந்திக்கும் போகும். அதுக்கு கடுகு எண்டுதான் சொல்லுவம். பேரப்புள்ளையள் ஒவ்வொருத்தரும் வரிசையா நிப்பம். கடுகு நிறைய இருந்தாலும் அவ கொஞ்சம் தான் தருவாவு. காரணம் கூட சாப்புட்டா வயிட்டோட்டம் வரும். அவ கொஞ்சம் தந்தாளும் வாய் கேக்காது. அவக்குத் தெரியாம எடுத்து அடிச்சா அப்பிடியே திகைக்கித்துப் போகும். புறகென்ன வயிட்டோட்டம் தான்.

பின்னாலப் போய் போய் ஏலாம கடைசியா அவவுட்டா போய் நிக்கிற. மல வாசல் அடைச்சு வயிட்டோட்டம் நிக்றதுக்கு கூடவே வெச்சிருப்பாவு மரமுந்திரிப் பழப் பாணி. நல்ல கனிஞ்ச பழமா எடுத்து அதப்புளிஞ்சு வார பாணத்த பதமாக் காச்சித்தான் அத செய்து வச்சிருப்பாவு. சில நேரம் அதப் போலவே இலுப்பம் பாணி, எண்ணெய், கித்துள் பாணி எல்லாம் அதோட சேர்த்து இருக்கும். தேனுக்கு நிகரா இருக்கும் இலுப்பம் பாணிட ருசி. தண்ணிக்க கூட கிடந்து சளி புடிச்சா சளி மாந்து எண்ணை வெச்சிருப்பாவு அத தலையில வைக்கிறது. சின்னப்புள்ளையளுக்கு சளித்தொல்ல வந்தா இந்த எண்ணய முலைக்காம்புல பூசி புள்ளையளுக்கு பால் கொடுப்பாங்க. சில நேரம் எண்ணக்கி சளி நல்லாப் போகாட்டி ஆவி புடிப்பம். தோட இல, தேசி இல, ஆடா தோடா இல, பதிமருந்து இல, தேயிலச் சாயம் எல்லாம் போட்டு சுட வைச்சி ஆவி புடிக்கத் தருவாவு. அத மூணு தடவ செய்தாப் போதும் எப்படிப் பட்ட சளியும் கரைஞ்சி காணாமப் போய்டும். அதுக்குப் புறகு வயித்தால போகக் குடிக்கத் தருவாங்க பரிசாரியார் குளிச. வயித்த முறுக்கி இருக்குற எல்லா கெட்ட சாமானையும் வெளில கொண்டு வந்திடும்.

பெரியம்மா ஊருல இருந்து வரக்குள்ள நிறைய சாப்பாட்டுச் சாமான்கள் கொண்டு வருவாவு. பனங்கட்டி, பனங்குட்டான், ஒடியல், பனாட்டு, பனங்கிழங்கு, பருத்தித்துற வட, வேப்பம் பூ வட, வடகம் எண்டு ஏகப்பட்டதுகள் இருக்கும். வந்தாவெண்டா ஒடியல் கூழ், குரக்கன் புட்டு எல்லாம் செய்து தருவாவு. தேத்தண்ணி குடிக்கிறது பனங்கட்டி கடிச்சித்தான். சில நேரம் அப்புச்சிட சேனைக்குப் போனால் அங்க வித்தியாசமா இருக்கும். ஒல்லிக்கிழங்கு, ஒல்லி அரிசி, தண்ணிச்சோத்துப் பழம், புளியம் பழம், பாலப்பழம், வீரப்பழம், சொரவணப் பழம், கறுக்காப் பழம், கிழாத்திப் பழம், கிண்ணம் பழம், பிரம்புப் பழம், நாவல் பழம், காரப்பழம், உன்னிப் பழம், பனம் பழம், மோதிரக்கன்னி பழம், மருங்கப் பழம், ஈச்சம் பழம், பளாக்காப் பழம், லாக்கடப் பழம், சூரப் பழம், கொவ்வம் பழம், நாயுருவிப் பழம், மயிர்க்கொட்டிப் பழம், துவரம் பழம், கடுபுளியம் பழம், கூளாப் பழம், விளாம் பழம், குருவிச்சம் பழம், கொசுவலங் கிழங்கு, தாமரக் கிழங்கு, கவலக் கிழங்கு, பண்டிக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு, பறங்கிக் கிழங்கு போன்ற இன்னும் பேர் தெரியாத நிறைய கிடக்கும். ஒவ்வொண்டும் ஒவ்வொரு விதம், சுவை, சத்து கொண்டு இரிக்கிம். குளத்து மீனப்புடிச்சி அத மாங்காக் கடையல் செய்து உப்பவியல் ஒண்டு வெச்சி மதியச் சாப்பாடு தருவாரு சும்மா அப்படி இருக்கும். அதுல எந்த விதமான கெமிக்களும் இருக்காது.

இப்படி எல்லாம் வாழ்ந்த வாழ்வை இன்று தொலைத்துக் கொண்ட, நாகரிகம் என்று சொல்லி மறந்து கொண்ட, மறைத்துக் கொண்ட கடைத் தலைமுறையினர் நாமல்லவா. வாழ்வியல் முறைகள், கலாசார முன்னெடுப்புக்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், மரபுப் பேணல்கள், கலை முன்னெடுப்புக்கள் என்று இன்னும் எத்தனையை இதற்குள் சொல்லி விட்டுச் செல்ல முடியும். எமக்கே உரிய வாழ்க்கையையும், எமக்கே உரிய வாழிடங்களையும், எமக்கே உரிய கலைப் பாரம்பரியங்களையும் என எமது அத்துணை அடையாளங்களையும் காலனீயச் சிக்கலுள் அமிழ்த்திக் கொண்டு நாம் இன்னும் எத்துணை தூரம் தான் துர்வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறோம்? முன்னைய காலங்களில் நன்றாக வாழ்ந்தோம், அப்போதெல்லாம் எந்த தீய விளைவுகளும் உண்டாகவில்லை. இப்போதுதான் எல்லாத் தீய விளைவுகளும் உண்டாகின்றது என்பதல்ல. ஏனெனில் எந்த காலகட்டத்திலும் வாழ்வது மனிதர் தானே. இன்றைய கால கட்டத்தில் பல நல்ல முன்னெடுப்புக்கள் தாராளமாகக் காணப்பட்டாலும் அதை எவ்வாறு நாங்கள் நுகர்ந்து கொள்ளப் போகின்றோம் என்பதுதான் வினா? பழமைக்கு திரும்புதல் அல்ல மாற்றம் பழமையை ஏற்று கால வர்த்தமானங்களுக்கு அமைய தக்கன வாழ்தலே இயற்கைக்கு இயைந்த மாற்றமும் வாழ்தலும் ஆகும்.

க. பத்திநாதன்

நன்றி- ஆரையம்பதி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More