Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை பொதுமுடக்க நிலையிலும் வாழ்க்கையை முடக்கும் மதுபானக் கள்ளச் சந்தை!

பொதுமுடக்க நிலையிலும் வாழ்க்கையை முடக்கும் மதுபானக் கள்ளச் சந்தை!

3 minutes read

குமார் சுகுணா 

கொரோனா அச்சத்தால் மொத்த நாடும் முடங்கி கிடக்கிறது. நாடு என்று  சொல்ல முடியாது மொத்த உலகமுமே அச்சத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா  அலைகள் முடிந்துவிட்டதா என்பது தெரியாது. இனியும் தொடருமா… எப்போது முடியும்,  என்பதும் தெரியாது. இந்த  கொரோனா தாக்கம்  எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  

இதனால் தான் நமது நாட்டிலும் தற்போது கொரோனா ஊரடங்கு  அமுலில் உள்ளது. ஆயினும் பலர் ஊரடங்கு என்பதனை மறந்து களியாட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றதை செய்திகளில் பார்க்கின்றோம். ஆனால் இதனை விட மோசமான செயல்தான்  சட்டவிரோத மது விற்பனை. ஊரடங்கினால் மது விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பலர் சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்றனர். 

அதுவும் வழமைக்கு மாறாக அதிகளவிலான பணத்துக்கு மது விற்பனை செய்யப்படுகின்றது.  மது மட்டும் இன்றி மது  உள்ளிட்ட ஏனைய போதை பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வு அற்று இருக்கின்றனர். மதுபாவனைக்கு அடிமையானவர்கள் ஊரடங்கில் இவ்வாறு சட்டவிரோத மதுவிற்கு அடிமையாகின்றனர். அதுமட்டும் இன்றி பல ஊர்களில் கசிப்பு,கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள்  உற்பத்தி செய்யப்பட்டு  அதனை மக்களும் வாங்கி அருந்துகின்ற துயர் அதிகரிக்கின்றது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில் அண்மையில், நுவரெலியா பொரகஸ் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 124 மதுபானம் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.  நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிபடையினர் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நுவரெலியா மதுவரி திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

 இது அந்த குறித்த ஒரு இடத்தில் மட்டும் நடப்பது அல்ல. இலங்கை முழுவதும் ஊரடங்கு நேரத்தில் இது போன்ற சட்ட விரோத மதுவிற்பனைகள் இடம் பெற்று வருகின்றன. மது எல்லோருக்கும் கிடைக்காத நிலையில் பல இடங்களில் கசிப்பு உள்ளிட்ட உற்பத்திகளிலும் சிலர் ஈடுபடுகின்றனர். நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த  தனிமைப்படுத்தல்  ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாகவும் அதிக விலையிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இரத்தினபுரி பகுதிகளில் இது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகம் வந்த நிலையில் தற்போது  புஸ்சல்லாவை பிரதேசத்தில் ஹெல்பொட வடக்கு  ( காச்சாமலை) கிராமத்தில் நீண்டகாலமாக கசிப்பு  உற்பத்தியில்   சில குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும் இதை நிறுத்துவதற்கு சில இளைஞர்கள் முற்பட்ட போதும்  அது சாத்தியப்படவில்லை என்றும்  பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்ததாவது, இந்த கிராமத்தில்  ( காட்டு லயம், கம்பி லயம் ) என்று இரண்டு பிரிவுகளாக இருக்கின்றது.  இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இதற்கு அருகாமையில் பாடசாலையும் இயங்கிவருகின்ற நிலையில், இந்த  பிரதேசத்தை சேர்ந்தவர்கள் கசிப்பு பாவனையிலும் உற்பத்தியிலும் ஈடுபடுவது பல சமூக பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முடக்கப்பட்ட நிலையில் 2000 ரூபாவுக்கு மேல் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு அடிமையானவர்கள் எவ்வவு பணம் கொடுத்தேனும் இதனை அருந்துகின்றனர். இதன் காரணமாக  குடும்பங்களில் பல வன்முறைகள் ஏற்படுகின்றன. தினசரி  தொழிலாளர்கள் இந்த கசிப்பு சாராயத்தை குடித்துவிட்டு குடும்பங்களில் சண்டைகளோடும் கண்ணீரோடும் வாழ்கின்றனர்.

இதற்கு  எப்போது தீர்வு வரும் என்கிற எதிர்பார்ப்போடு பிரதேச பெண்களும் சிறுவர்களும்  வாழ்க்கையை தொடர்கின்றனர். இதனால் சிறார்களின் கல்வி நடவடிக்கையும் பாதிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் விரைவாக  செயற்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையக பெருந்தோட்டப்பகுதிகளில், தொடர்ந்து இது போன்ற சட்ட விரோத மது, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை  உற்பத்தி அதிகரிப்பது கவலையளிப்பதாகவே உள்ளது. பெரும்பாலான தோட்டங்களில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுவதில்லை.

இந்நிலையில் இது போன்ற போதை பொருட்களின் விற்பனை கொரோனா அச்சத்துக்கு மத்தியில் வாழ்வோருக்கு மேலும் பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இது கொரோனா பரவலை அதிகரிப்பதோடு குடும்ப, சமூக நல சீர்கேட்டினை ஏற்படுத்துவதாக அமைகின்றது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More