ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) விஷம் அருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு கொண்டுச் செல்ல ரஷ்ய மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு கொண்டு செல்ல முடியாத அளவுக்கு அலெக்ஸி நவல்னியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவர்களின் முடிவை அவரது ஆதரவாளர்கள், ‘நவல்னியின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தல்’ என விபரித்துள்ளனர்.
ஆனால், நவல்னிக்கு மட்டுமல்ல, அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் ஆபத்தான பொருள் அவரை தாக்கியுள்ளதாக மருத்துவர்களின் அறிக்கை தெரிவிக்கின்றது. இருப்பினும், ஒரு மருத்துவர் இப்போது சோதனைகளால் எந்த விஷமும் கண்டறியப்படவில்லை என்று கூறுகிறார்.
இதனிடையே, நவல்னியை சிகிச்சைக்காக பெர்லினுக்கு அழைத்து வர ஜேர்மனியில் ஆர்வலர்கள் ஒரு விமானத்தை அனுப்பியுள்ளனர்.
நவல்னி சிகிச்சை பெற்றுவரும் சைபீரியாவில் உள்ள ஓம்ஸ்கில் உள்ள மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அலெக்சாண்டர் முரகோவ்ஸ்கி, நவல்னியின் நிலை கொஞ்சம் மேம்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் இன்னும் நிலையற்றவராக இருப்பதாகவும் நவல்னியை நகர்த்துவதற்கு முன்னர் சட்ட கேள்விகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
44 வயதான அலெக்ஸி நவல்னி, நேற்று வியாழக்கிழமை, சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்ற போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் சூடான திரவத்தில் விஷம் கலந்து குடித்ததாக கூறினார்கள். அவர் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளார். ஆகவே இதன் உண்மை தன்மையை அறிய முடியாதுள்ளது.