சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க நாடு தயாராக இருப்பதாக சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டார்பூரில் போர்க்குற்றங்கள் தொடர்பாக நியாயாதிக்க சபை முன்னிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி ஒமர் அல்-பஷீர் உட்பட பலர் ஆஜராகவுள்ளார்கள்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் கார்ட்டூமில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்-பஷீர் மீது 2003 ஆம் ஆண்டு முதல் சுமார் 300,000 மக்களைக் கொன்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சூடான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சந்தேகநபர்கள் ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பெப்ரவரி மாதம் கிளர்ச்சிக் குழுக்களுடன் அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தை எட்டியது. ஆனால் ஹாம்டோக் முன்னர் சூடானின் நிலைப்பாட்டை பகிரங்கமாக உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகுவதற்கு ஐ.சி.சி உடன் ஒத்துழைக்க அரசாங்கம் முழுமையாக தயாராக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்துவதாக நேற்று சனிக்கிழமை பிரதமர் அப்தல்லா ஹம்டோக் அறிவித்தார்.
இதேவேளை, ஹம்டோக் தலைமையிலான கூட்டு சிவில்-இராணுவத்துடன் இணைந்த சூடானின் இடைக்கால அரசாங்கம், டார்பூரில் செயற்படும் சில கிளர்ச்சிக் குழுக்களுடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் அரசாங்கமும் சில கிளர்ச்சியாளர்களும் ஓகஸ்ட் 28 அன்று ஒரு ஒப்பந்தத்தை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கங்கள் தொடர்பான அமெரிக்காவின் பட்டியலில் இருந்து சூடானை நீக்குவது குறித்து அமெரிக்க நிர்வாகத்துடன் கலந்துரையாடப்படுவதாகவும் எதிர்வரும் வாரங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்-பஷீரின் அரசாங்கம் “பயங்கரவாத குழுக்களை” ஆதரிக்கிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் வொஷிங்டன் 1993இல் சூடானை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அரசாங்கங்கள் பட்டியலில் இணைத்தது.
இதன் காரணமாக சூடான், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடமிருந்து கடன் நிவாரணம் மற்றும் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு தகுதியற்றதாகிறது.
இந்நிலையில் இந்த பட்டியலில் இருந்து சூடானை நீக்குவதற்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.