கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்று ஏறத்தாழ 9 மாதங்களாகியுள்ள போதிலும் வைரஸ் தொற்று பரவல் பல நாடுகளில் தற்போதும் உச்சக்கட்டத்தில் உள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்த நாடுகள், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாமல் கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவிற்கான செயல் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் ஆதனோம் கேப்ரியேசுஸ் கூறுகையில், ‘பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக எந்த நாடும் கூற முடியாது. உண்மை என்னவெனில் இந்த வைரஸ் மிக எளிதாக பரவும்.
எனவே, கொரோனாவை கட்டுப்படுத்தாமல், கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவிற்கான செயலாகும். மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் இருந்தே பெரிய அளவில் தொற்று பரவல் ஏற்படுகிறது’ என தெரிவித்தார்.