பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் உலக நாடுகள் மீளாத நிலையில், அங்கு மேலும் ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்த 2 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கொரோனாவின் மற்றுமொரு புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
இதுவும் பிரித்தானியாவில் அண்மையில் கண்டறியப்பட்டது போலவே வீரியமாக பரவும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் தென் ஆப்ரிக்காவில் இந்த வைரஸ் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் மேத் ஹன்காக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த வாரங்களில் தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்தவர்களிடம்தான் இரு (கொரோனாவின் மாறுபட்ட வெளிப்பாடு) வைரஸ்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த புதிய வைரஸ் மேலும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. ஏனெனில் இது மிகவும் வேகமாக பரவுவது மட்டுமின்றி பிரித்தானியாவில் கண்டறியப்பட்டதைவிட மேலும் மாற்றம் கொண்டதாக தெரிகிறது’ என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, பிரித்தானியாவில் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தென் ஆப்ரிக்காவுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென் ஆப்ரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது.
இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக நாடுகள் இரத்து செய்துள்ளன. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அங்கு மேலும் ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.