பாகிஸ்தான் பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க, அந்நாட்டின் மிகப்பெரிய பூங்காவை 50 ஆயிரம் கோடி பாகிஸ்தான் ரூபாய்க்கு அடகு வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டதால், அந்நாட்டின் அந்நிய செலவாணியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில், சவுதி அரேபியா 3 பில்லியன் டொலர் மென்மையான கடனை முன்கூட்டியே திருப்பித் தருமாறு பாக்கிஸ்தானைக் கேட்டுக் கொண்டது.
இஸ்லாமாபாத் அதன் தற்போதைய இராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை அனுப்பி பதற்றங்களைத் தணிக்க முயன்றது. இருப்பினும், சவூதி அரேபியா தனது கோரிக்கையிலிருந்து மீளவில்லையென தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அரசின் நிதி ஆதாரத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக, தலைநகர் இஸ்லாமாபாத்தில், 759 ஏக்கர் பரப்பளவில் உள்ள எஃப் -9 பூங்காவை பிரதமர் இம்ரான் கான் அடகு வைத்து பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்வரும் செவ்வாய்கிழமை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஃப் -9 பூங்கா, மதர்-இ-மில்லத் பாத்திமா ஜின்னாவின் பெயரிடப்பட்டது. இது பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய பசுமையான பூங்காக்களில் ஒன்றென்பதுவும் குறிப்பிடதக்கது.