ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து பல ஆண்டுகள் கழித்து பல அகதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் விடுவிக்கப்பட்ட குர்து ஈரானிய அகதியான Mostafa Azimitabar தான் விடுதலைச் செய்யப்பட்ட பிறகு புதிய மனிதனாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.
சுமார் 7 ஆண்டுகள் ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்டிருந்த இவர், ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு 14 மாதங்கள் ஆஸ்திரேலிய ஹோட்டல்கள் சிறைவைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
“எட்டு ஆண்டுகளாக, பல விதமான அழுத்தத்திற்கு இடையிலும், சித்ரவதைக்கு இடையிலும் துயரமான சூழலிலும் இருந்தேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் சிறைவைக்கப்பட்டிருந்த மெல்பேர்ன் பார்க் ஹோட்டலிலிருந்து கிட்டாருடன் Mostafa வெளியேறிய போது வெளியில் காத்திருந்த அகதிகள் நல செயல்பாட்டாளர்கள் அவரின் பாடலைப் பாடி வரவேற்றிருக்கின்றனர்.
இவருடன் 51 அகதிகளுக்கு தற்காலிக இணைப்பு விசா வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவரது விடுதலையைக் கொண்டாடும் அதே நேரத்தில் பார்க் ஹோட்டலிலும் இன்னும் பிற ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களிலும் 14 தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்படாமைக் குறித்து வருத்தம் கொள்கிறார் Mostafa.
“நான் தற்போது விடுவிக்கப்பட்டு விட்டேன். ஆனால் இன்னும் அப்பாவிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” என அவர் கூறியிருக்கிறார்.
அதே சமயம், தற்போது விடுவிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு வழங்கப்பட்ட இறுதிப் புறப்பாடு இணைப்பு விசா குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை, ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னதாக தற்காலிகமாக ஆஸ்திரேலிய சமூகத்தில் தங்க மட்டுமே இந்த இணைப்பு விசா அனுமதிக்கிறது எனக் கூறியிருக்கிறது.
“ஆஸ்திரேலிய கொள்கை என்பது தெளிவாக உள்ளது. சட்டவிரோத கடல்வழிப் பயணத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் ஒருபோதும் இங்கு நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள்,” என
ஆஸ்திரேலிய உள்துறை குறிப்பிட்டுள்ளது.
“ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட இந்த அகதிகள், மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் அல்லது நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளுக்கு திரும்ப வேண்டும் அல்லது சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்ல வேண்டும்,” என ஆஸ்திரேலிய உள்துறை சுட்டிக்காட்டியுள்ளது. —