இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா விமான சேவையின் 737-524 போயிங் விமானம் அந்நாட்டில் உள்ள மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலையத்துடன் அந்த விமானத்தின் தொடர்பு இழக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, விமானம் பறந்துகொண்டிருந்த உயரம் திடீரென ஒரே நிமிடத்தில் 10 ஆயிரம் அடி குறைந்தது என விமான கண்காணிப்பு இணைய தளமான (Flightradar24.com.) தெரிவித்துள்ளது.
விமானத்தை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானம் குறித்த தகவல்களைப் பெற முயன்றுவருவதாக உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ஸ்ரீவிஜயா ஏர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது.