கடந்த ஆண்டு தாய்வானுக்கு படகு மூலம் நகரத்தை விட்டு வெளியேற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 12 ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் குழுவுக்கு உதவியது தொடர்பான சந்தேகத்திற்குரிய குற்றச்சாட்டில் 11 பேரை ஹொங்கொங் பொலிஸார் கைது செய்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களில், 18 முதல் 72 வயதுடைய எட்டு ஆண்களும் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக அந் நாட்டு செய்திச் சேவையான ஆர்.டி.எச்.கே தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் பிரதான நிலப்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 பேருக்கு உதவ முயன்ற வழக்கறிஞர் டேனியல் வோங் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆவர்.
டிசம்பர் பிற்பகுதியில் இவ்வாறு சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டியதற்காக சீன நீதிமன்றம் அவர்களில் 10 பேருக்கு ஏழு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்தது.
கைதுசெய்யப்பட்ட நேரத்தில் சிறுவர்களாக இருந்த இருவர் ஹொங்கொங்கிற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கைதானவர்களின் குடும்பங்கள் தங்களுக்கு சுயாதீன வழக்கறிஞர்களுக்கான அணுகல் மறுக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவின் கைதுக்கு ஹாங்காங் அதிகாரிகள் உதவியதாகவும் கூறினர்.
2020 ஜூன் மாதம் பீஜிங் ஒரு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதித்ததிலிருந்து தாய்வான் ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஆர்வலர்களின் பிரபலமான இடமாக மாறியுள்ளது.
100 க்கும் மேற்பட்டோர் பீஜிங்கின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தற்சமயம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
1997 ஆம் ஆண்டில் “ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்” ஒப்பந்தத்தின் கீழ் பீஜிங்கின் ஆட்சிக்கு திரும்பியபோது, சீனாவில் வேறு எங்கும் கிடைக்காத உயர் சுயாட்சி ஹொங்கொங்கிற்கு உறுதியளிக்கப்பட்டது.
பாதுகாப்புச் சட்டம் திணிக்கப்பட்டதிலிருந்து, ஊடக அதிபர் ஜிம்மி லாய் போன்ற முன்னணி ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில ஜனநாயக சட்டமியற்றுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், ஆர்வலர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர், எதிர்ப்பு கோஷங்களும் பாடல்களும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.