வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதடி பாலத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வீதி சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தவேளை, அவ்வழியாக வந்த ஹயஸ் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை மறித்து சோதனையிட்டபோது அவற்றுள் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து, வாகனங்களில் பயணித்த 6 பேரையும் கைது செய்த பொலிஸார் வாகனங்களையும் பறிமுதல் செய்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதன்போது நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து ஆறு பேரையும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.