யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் அடிப்படையில் 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர்.
விஞ்ஞான பீடம், தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றின் முன்னாள் பீடாதிபதியும், கணிதப் புள்ளி விபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா முதலாமிடத்திலும் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் இரண்டாமிடத்திலும் வணிக முகாமைத்துவ பீடாதிபதி ரி.வேல்நம்பி மூன்றாமிடத்திலும் உள்ளார்.
முன்னாள் துணைவேந்தரும், கணிதப் புள்ளிவிபரவியல் துறையின் முதுநிலை விரிவுரையாளருமான பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நான்காவது இடத்திலும் மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ் ஐந்தாவது இடத்திலும் பேராசிரியர் அபே குணவர்த்தன தலைமையிலான மதிப்பீட்டுக்குழுவால் முன்மொழியப்பட்டுள்ளனர்.
புள்ளி விபரவியல் துறைப் பேராசிரியர் செ. இளங்குமரன் மதிப்பீட்டுக் குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து பேரையும் தெரிவு செய்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவருடன், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பேரவையினால் முன்மொழியப்பட்ட இருவரையும் கொண்ட, மதிப்பீட்டுக்குழு இன்று காலை கூடியது.
இந்த மதிப்பீட்டுக்குழு ஒவ்வொரு விண்ணப்பதாரிகளாலும் தனித்தனியாக குழுவின் முன் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளையும் மதிப்பீடு செய்த பின்னர், ஆறு பேரில் இருந்து திறமை அடிப்படையில் புள்ளிகளைப் பெறும் ஐந்து பேரது விவரங்களைப் பேரவை உறுப்பினர்களின் மதிப்பீட்டுக்காக இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களால் ஒவ்வொரு விண்ணப்பதாரிகளும், தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டதைப் போலவே, முன்மொழியப்பட்ட ஐந்து பேரையும் ஒவ்வொரு பேரவை உறுப்பினர்களும் சுற்றறிக்கையின் படி தனித்தனியாக மதிப்பீடு செய்து புள்ளிகளை வழங்குவர். இந்த மதிப்பீடு இன்று பிற்பகல் ஆரம்பாகி நடைபெற்று வருகிறது.
சுயாதீன மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்களின் தனித் தனி மதிப்பீட்டுப் புள்ளிகள், பேரவை உறுப்பினர்களின் தனித்தனி மதிப்பீட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களையும் பெறும் திறமைப் பட்டியல் பல்கலைக்கழகப் பேரவையின் பரிந்துரையுடன், தகுதி வாய்ந்த அதிகாரியினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு நாளைய தினமே அனுப்பி வைக்கப்படும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு ஊடாகத் தனது பரிந்துரையை ஜனாதிபதிக்கு முன்வைக்கும். 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் படி, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, துணைவேந்தர் பதவிக்கு ஒருவரைத் தெரிவு செய்வார்.