மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது.
கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரம சிங்க, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச் சொரூப பவணி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரதி நிதிகள், திணைக்கள தலைவர்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மடு அன்னையிடம் ஆசி பெற்றனர்.