இளைஞர், யுவதிகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தது அவர்களது தவறல்ல என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இளைஞர், யுவதிகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தது அவர்களது தவறல்ல என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
ஸ்ரீலங்கா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை உள்வாரியாகவோ அல்லது வெளிவாரியாகவோ கற்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் தான் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்துள்ளார்கள்.
இந்தப் பட்டம் ஸ்ரீலங்காவில் அங்கீகரிக்கப்பட்டதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சான்றுப்படுத்துகின்றது.
கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனத்தின் போது வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளார்கள். இதனால் தான் அதிகமானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெறும் நிலை வந்தது.
பட்டதாரி நியமனத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்ட போது ‘அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டம்’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்று விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இதனால் தான் அனைத்துப்பட்டதாரிகளும் விண்ணப்பித்தார்கள்.
தேர்தலுக்கு முன் பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்ட போது வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கும் நியமன கடிதம் வழங்கப்பட்டது.
நிலமை இப்படி இருக்க ஆட்சிக்கு வந்த பின்னர் பட்டதாரி நியமனத்தில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தவர்கள் புறக்கணிப்படுவது எந்த வகையிலும் நியாயமானதல்ல.
அரசு இந்த விடயத்தை உடனடியாக மீள் பரிசீலனை செய்து தகுதியான சகல பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க வேண்டும்.
இதேவேளை இந்த நியமனத்துக்கு விண்ணப்பித்த பலர் கொரோனவால் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர். எனவே அவர்கள் நாடு திரும்பி இந்நியமனத்தை பெற கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்