தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு செல்வம் அடைக்கலநாதனும், கட்சியின் கொறடா பதவிக்கு தர்மலிங்கம் சித்தார்த்தனும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என அறியமுடிகின்றது.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இரா.சம்பந்தன் இந்த முடிவை அறிவித்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்த விடயங்கள் பிரேரிக்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரையில் இவற்றை வெளியிடுவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எம். சுமந்திரனிடம் ஆதவன் வினவியபோது “அவ்வாறு வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை” என கூறியுள்ளார்.
பொதுத்தேர்தலுக்கு பின்னர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம், கூட்டமைப்பின் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பல்வேறு ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.