வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
கவன ஈர்ப்பில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பேரணியாக ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றனர். குறித்த பகுதியில் கவன ஈர்ப்பில் ஈடுபட்டதுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
வடக்கு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் இன்றைய தினம் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கிளிநொச்சியிலும் குறித்த போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் 500க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் கலந்து கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதன்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மைக்கேல் பேச்லெட் ஜெரியாவிற்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.