செல்வந்தர்கள் தமது பிள்ளைகளை வசதி வாய்ப்புகளுடன் கற்பித்து வரும் கல்வி யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலையில் தகரக் கொட்டகை ஒன்றை அமைத்து தன்னலம் கருதாது கற்பித்து வருகின்றார் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர்.
மாணவர்கள் பாடசாலை முடிந்து வந்ததும் பிற்பகல் வேளையில் அவர்களுக்குக் கற்பித்து வருகிறார் இந்த யுவதி.
பின்தங்கிய வறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த இந்த மாணவி தற்போது பல்கலைக்கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு தனது பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். தான் ஆரம்பத்தில் கல்வி கற்பதற்காக அனுபவித்த இன்னல்களை தனது கிராமத்தைச் சேர்ந்த ஏனைய பிள்ளைகளும் எதிர்கொள்ளக் கூடாது என நினைத்து இம்மாணவி இந்த சேவையை மேற்கொண்டு வருகின்றார்.தனது சொந்ற முயற்சியினால் தமது வீட்டுக்கு அருகிலுள்ள காணி ஒன்றில் சிறியதொரு தகரக் கொட்டகை அமைந்து தமது கிராம பிள்ளைகளுக்கு தனது பல்கலைக்கழக கற்றல் நேரங்களை விட எனைய ரேரங்களில் கற்பித்து வருவதாக தெரிவிக்கின்றார் கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவி கோணேஸ்வரன் மிதுசியா.
தனது முயற்சியினால் தற்போதைய கொழுத்தும் வெயிலுக்கு மத்தியில் தகரக் கொட்டகை அமைத்து, அதனுள் மணல் இட்டு, அதற்குள் பாய் விரித்து பிள்ளைகளை வைத்து கற்பித்து வருகின்றார் இவர்.
“இந்த கொட்டகையை சற்றுப் பெரிதாக்கி, பிள்ளைகள் இருக்கக் கூடிய மேசை கதிரைகள் வழங்கினால் இப்பகுதியைச் சேர்ந்த ஏனைய பிள்ளைகளையும் அழைத்து நான் கற்பிப்பேன்” என தமது ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றார் மிதுசியா.”தற்போது எமது சமூகம் மெல்ல மெல்ல கல்வியில் வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது.
ஆனால் அவர்களுக்குரிய அடிப்படைக் கல்வியை வழங்க வேண்டியது அவசியமாகும், ஆனாலும் எமது பகுதியில் அதிக பிள்ளைகள் இடைநடுவே பாடசாலைக் கல்வியை விட்டு விடுவார்கள். இனிமேலும் அந்த நிைலமை ஏற்படக்கூடாது என நினைத்து நான் ஆரம்பத்தில் மநிழலில் வைத்து பிள்ளைகளுக்கு கற்பித்தேன். தன்போது எனது சிறு முயற்சியின் காரணமாக சிறிய தகரக் கொட்டகை ஒன்று அமைத்துள்ளேன்.
ஆனால் அதனுள் கதிரை, மேசை, என்பன இல்லாமலுள்ளன” என அவர் மேலும் தெரிவிக்கின்றார். கொடுவாமடு கிராமத்தில் தன்னலம் கருதாது அப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உந்துசக்தியளிக்கும் மிதுசியாவின் முயற்சிக்கு பணவசதி படைத்தோர் உதவி செய்ய முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கொடுவாமடு பல்கலைக்கழக மாணவியின் தன்னலம் கருதாத சமூகப் பணி