தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் இன்று (26) சற்றுமுன் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் தியாக தீபம் திலீபன் உயிர்க்கொடை வழங்கிய 33ம் நினைவு நாளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்திய- இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூர் கந்தன் ஆலய வீதியில் 12 நாள்கள் ஒறுப்பிலிருந்த தியாக தீபம் திலீபன், 1987ம் ஆண்டு செப்டம்பர் 26ம் நாள் காலை 10.48 மணியளவில் வீரச்சாவை தழுவினார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை நடத்த தமிழர் தாயகத்தில் இம்முறை பொலிஸாரால் அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத் தடையும் பொலிஸாரால் பெறப்பட்டது.
இந்நிலையில் நினைவேந்தல்கள் நடத்துவது தமிழ் மக்களின் உரிமையாகும், அதனைத் தடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடந்தவாரம் கடிதம் அனிப்பியிருந்தன. எனினும் ஜனாதிபதி அதற்கு பதிலளிக்காத நிலையில் நினைவேந்தல் தடை நீடிக்கப்பட்டது.
அதனையடுத்து தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உள்படுத்துவதை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.