2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான வருவாயைத் திரட்டும் முறையினைக் குறிப்பிட அரசாங்கம் தவறிவிட்டது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அக்கட்சி, பொது நிதி விவகாரத்தில் வெளிப்படைதன்மை வேண்டும் என்றும் பொருளாதாரம் தொடர்பான புள்ளிவிவரங்களை உரிய நேரத்தில் வெளியிடுவதை உறுதி செய்யுமாறும் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது.
நாட்டின் பொது நிதி தொடர்பாக அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை இல்லாததால் கவலை வெளியிட்டுள்ள அக்கட்சி,பொருளாதார புள்ளி விவரங்களை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் நாட்டின் கடன் மதிப்பீட்டில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தால் உயர்த்தப்பட்ட மற்றும் பலப்படுத்தப்பட்ட அந்நிய செலாவணி காரணமாக 2020 ஆம் ஆண்டிற்கான தேவையான கடனை திருப்பிச் செலுத்த தற்போதைய அரசாங்கத்தால் முடிந்தது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்பு, நாட்டின் வெளிநாட்டு இருப்பு 1.4 டிரில்லியனாக இருந்தது என்றும் இது கருவூல அதிகாரிகளுக்கு இந்த ஆண்டுக்கான கடன் தேவைகளை பூர்த்தி செய்ய அனுமதித்தது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
மேலும் நாட்டின் பொது நிதிகளைக் கையாளும் போது பொறுப்பான முறையில் செயற்படுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது