மாவீரர் நாளுக்கான தடை என்பது, எமது தமிழ் மக்களிடையே ஒரு வலுவான தமிழ்த்தேசியப் பற்றுதலை உண்டுபண்ணுவதுடன், தமிழர்களை எழுச்சி கொண்டு கிளர்ந்து எழச் செய்யும் செயற்பாடென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுக்கு மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பிறப்பிக்கப்பட்டுள்ள தடைக்கட்டளையை முல்லைத்தீவு போலீஸ்நிலையப் பொறுப்பதிகாரி 21.11.2020 இன்றையநாள் ரவிகரன் அவர்களது இல்லத்திற்குச் சென்று கையளித்திருந்தார்.
குறித்த தடைக்கட்டளையினைப் பெற்றுக்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மாவீரர் நாளுக்கான தடை விதிக்கப்படவில்லை. அதற்கு முன்னரும் தடைகள் எவையும் விதிக்கப்படவில்லை.
இந் நிலையில் தொடர்ச்சியாக நாங்கள் எங்களுடைய விதைக்கப்பட்ட உறவுகளை எண்ணி கண்ணீர் சிந்தி, அஞ்சலிக்கும் இந்தமாவீரர்நாளை தற்போதைய அரசாங்கம் தடைசெய்துள்ளது. அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்வது பொருத்தமானதல்ல.
குறித்த மாவீரர் நாளுக்கான தடை என்பது, எமது தமிழ் மக்களிடையே ஒரு வலுவான தமிழ்த்தேசியப் பற்றுதலை உண்டுபண்ணுவதுடன், தமிழர்களை எழுச்சி கொண்டு கிளர்ந்து எழச் செய்யும் ஒரு செயற்பாடாகப் பார்க்கின்றேன் – என்றார் .