Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் கணவன் கிளைமோர் குண்டுடன் கைது! | உண்மை என்ன?

புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் கணவன் கிளைமோர் குண்டுடன் கைது! | உண்மை என்ன?

3 minutes read

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் குழந்தையுடன் கிளைமோர் குண்டொன்றை கொண்டு சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் நேற்றைய தினம் (02) பரந்தனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு செய்தி வெளியிட்டது சிங்கள ஊடகம். இதன் உண்மை தன்மை என்ன? எதற்காக? யார் இதனை செய்துள்ளார்கள்? தமிழினத்தை முடக்க நாட்டில் உள்ளவர்களின் கைவரிசையா? திரைமறைவு அரசியல் என்ன? என்று பல கேள்விகளை இந்த செய்தி ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இச் செய்தியை சிந்தனையுடன் ஆராய வேண்டிய அவசியத்தினால் இங்கே வணக்கம் லண்டன் பிரசுரம் செய்கிறது. “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு“ -திருக்குறள்

முழுமையான செய்தி இதோ!

சந்தேகநபர், பையொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் இந்த குண்டை மறைத்து, கொண்டு சென்றுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வலையமைப்பின் ஊடாகவே குறித்த நபருக்கு கிளைமோர் குண்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுவிட்ஸர்லாந்திலிருந்து இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்படுவதாக கூறப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இலக்கு வைத்து, கிளைமோர் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புலனாய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து இலங்கை மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்ட 15வது சந்தர்ப்பம் இதுவென கூறப்படுகின்றது.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நெடுங்கேணி வனப் பகுதியில் இராணுவ தாக்குதலினால் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கோபியின் சகோதரர் ஒருவர் சுவிஸர்லாந்திலிருந்து, இலங்கை மீது தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக தகவல் கிடைத்துள்ளதென பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இயக்கச்சி பகுதியிலுள்ள கோபியின் தாய் வாழும் வீட்டிற்கு முன்பாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக வெற்று காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், புதைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் சிலவற்றையும் பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட கிளைமோர் குண்டு, ஒன்று தசம் 800 கிலோகிராம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கைக்குண்டு கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ஒருவரினாலேயே, இந்த கிளைமோர் குண்டு தனக்கு கிடைத்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக வெளிநாடொன்றிலிருந்து இவருக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவித சந்தேகமும் எழக்கூடாது என்பதற்காகவே, தனது 7 வயதான பிள்ளையையும், குறித்த பெண் தன்னுடன் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்திற்கும், குண்டொன்றை கொண்டு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த குழுவின் இலக்கு தொடர்பில் இராணுவு புலனாய்வு பிரிவு மற்றும் பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியன விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More