கொரோனா தொற்றினால் இறக்கின்ற இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக திருகோணமலையில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய திருகோணமலை மக்கெய்சர் மைதான வேலியில் இன்று (புதன்கிழமை) காலை 6.45 மணியளவில் கவன் துணி கட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சட்டத்தரணிகள் சங்கத் தலைவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி லாகீர் இஸ்லாமியர்களது உடலங்களை சுற்றிக் கட்டும் வெண்ணிற கவன் துணியால் தன்னை மூடிக்கொண்டு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
மேலும் இதன்போது சிறுபான்மையினரின் மத உரிமைக்கு மதிப்பளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதேநேரம், குறித்த எதிர்ப்பு நடவடிக்கையானது உத்தியோகபூர்வமாக திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.