தமிழர் தாயகத்தில் தமிழரின் இன விடுதலைக்கான இறுதிக்கட்ட யுத்தம் 2009 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் எம் அப்பாவித் தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதிகளினால் யுத்த விதிமுறைகளுக்கு முறனாக தமிழர் என்ற ஒரே ஒரு காரணத்தினால் படு கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
அக்காலப் பகுதியில் எமது அண்டைய வல்லரசு நாடானா இந்தியாவும்,சர்வதேச நாடுகளும் எம் மக்கள் மீது சிங்கள பேரினவாதம் தொடுத்த போரை தமது உச்சகட்ட அழுத்தத்தை பிரயோகித்து நிறுத்துவதற்கு முற்படாமல் மௌனம் காத்து வேடிக்கை பார்த்தனர் என்பது தற்பொழுது கடந்தகால வரலாறாகிவிட்டது.
தமிழிழ மக்கள் அநீதியாக கொல்லப்படுவதை தமிழக அரசும், இந்திய மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு சிங்கள பேரினவாதத்திற்கு அழுத்தத்தை பிரயோகித்து போரை நிறுத்தி எம் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் எமது விடுதலைப் போராட்டமானது நியாயமானது அதற்கு தமிழக மக்கள் அனைவரும் எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்ற காரணங்களை முன்வைத்து 2009 ம் ஆண்டு சனவரி 29 ம் நாள் அன்று தமிழகத்தில் சென்னை மாநகரின் சாஸ்திரிபவன் (இந்திய மத்திய அரசின் தூதரகம்) முன்பாக தனக்கு தானே பெற்றோல் ஊற்றி தமிழிழ எம் மக்களுக்காக முத்துக்குமார் எனும் மாவீரன் தனது 28 வது வயதில் தன்னைத் தானே ஆகுதியாக்கிக் கொண்டார்.
அந்த மாவீரன் முத்துக்குமாரின் பன்னிரெண்டாவது (12) வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.
இனிவரும் காலங்களில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவு நாட்களை எழுச்சி பூர்வமாக நடாத்துவோம் என்பதோடு நின்றுவிடாமல் தமிழர் தாயகத்தில் அடுத்த தலைமுறையினருக்கும் எமது வரலாறுகள் சென்றடையும் விதமாக தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை எமது தமிழ்த் தேசியத்திற்கான நிகழ்ச்சி நிரல்களை வடிவமைத்து செயற்படும்.
மேலும் எதிர்காலத்தில் முல்லைத்தீவு மண்ணில் மாவீரன் முத்துக்குமார் அவர்களுக்கு அவரின் உயரிய தியாகத்திற்கும் தமிழிழ மக்கள் மீது அவர் கொண்ட பேரன்பின் நிமிர்த்தத்திற்குமாக மாவீரன் முத்துக்குமாருக்கு திருவுருவச்சிலையை நிறுவுவதற்கான முழுப் பொறுப்பையும் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை எடுத்துக் கொள்கின்றது எனும் செய்தியை தமிழர் தாயக மக்களுக்கும், தமிழக தொப்புள் கொடி உறவுகளுக்கும் உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுவீகரன் நிஷாந்தன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவை