யாழ்ப்பாண மாநகர சபையில் ஈபிடியின் ஆட்சியை அமைத்தமையின் வாயிலாக மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகத்தை விஸ்வலிங்கம் மணிவண்ணன் புரிந்திருப்பதாக அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையம் குற்றம் சுமத்தியுள்ளது.
தம்மை ஆதரித்த தமிழ் இளைஞர் யுவதிகளின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து யாழ்ப்பாணத்தில் இன்னொரு டக்ளஸ் தேவானந்தாவாக மணிவண்ணன் உருவெடுத்திருப்பதாகவும் விமர்சித்துள்ள அவதானிப்பு மையம், அதுவே இவரின் அரசியல் வீழ்ச்சியாகவும் அமையும் என்றும் கூறியுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக பல வரலாற்று துரோகங்களை இழைத்து இன அழிப்பு செய்யும் சிங்கள அரசிற்கு துணை நிற்கும் ஈபிடிபி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் யாழ்ப்பாண மாநகர சபை மேயராக விஸ்வலிங்கம் மணிவண்ணன் பதவியேற்றுள்ளதாகவும் அவதானிப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.
அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு மையத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தன்னை தவிர மற்றவர்கள் அனைவரும் துரோகி” என பேசி வந்த மணிவண்ணன் “தன்னைவிடவும் ஒரு துரோகி இல்லை” என்பதை நிரூபித்துள்ளார். அத்துடன் கடந்த காலத்தில் தன்னை வளர்த்த கட்சியை ஏன் எட்டி உதைத்தார் என்பதற்கான பின்னணியையும் அவரே வெளிப்படுத்தியுள்ளார்.
மிகவும் இளைய வயதிலேயே சட்ட புலமையும் இளைஞர்களை ஒருங்கிணைப்பும் தமிழ் தேசிய ஈடுபாடும் கொண்ட தனது செயற்பாடுகளால் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் தமிழ் தேசிய அரசியலுக்கும் வலுச் சேர்த்த மணிவண்ணன், இத்தகைய முடிவு ஒன்றை எடுத்திருப்பது தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சிங்களப் பேரினவாத அரசின் நிரந்தர அடிமையாக, ஈழத் தமிழ் இனத்தின் வரலாற்று துரோகியாக கருதப்படும் டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்த வி. மணிவண்ணன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், டக்ளஸ் தேவானந்தா போல ஒரு அமைச்சராக மாறியிருப்பார் என்பதையும் இப்போது மக்கள் உணர்ந்துள்ளனர்.
அற்ப பதவி ஆசைக்காக தமிழ் தேசியத்திற்கு விரோதமான முறையில், யாழ் மாநகர ஆட்சியை அமைத்து வரலாற்று துரோகம் புரிந்த மணிவண்ணன், இனி எந்தக் காலத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்தும் மாவீரர்கள் குறித்தும் பேச அருகதையற்றவர் என்பதும் சுட்டிக்காட்ட வேண்டியது. மணிவண்ணன் மாத்திரமின்றி, வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட முன்னணி உறுப்பினர்களும் இந்த துரோகத்தின் பங்குதாரர்களே.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசியல் செய்வது வேறு, தமிழ் தேசியத்திற்கு எதிராக அரசியல் செய்வது வேறு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மணிவண்ணனை கையாண்ட வித்தில் தவறுகள் இருந்திருக்கலாம். அதற்கு பதிலாக மணிவண்ணன் தனியான பாதையில் தமிழ் தேசிய பற்றுடன் பயணித்திருக்க வேண்டும்.
அதற்காக டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து ஆட்சியமைப்பது என்பது மிகவும் முன்னூதாரணமற்ற அரசியலாகும். கடந்த நாடாளுன்றத் தேர்தலின் பின்னர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளின் பின்னணி என்ன என்பதற்கான விடையும் தற்போது கிடைத்துள்ளது.
மணிவண்ணன், தமிழ் தேசியப் பயணத்தில் தடம்புரண்டு செயற்படுவாதாக கடந்த காலத்தில் முன்னணியினர் தெரிவித்த குற்றச்சாட்டுககைள இவரே ஏற்றுக்கொண்டதைப் போல நடந்துகொண்டுள்ளார் என்பதையும் இங்கே நினைவுபடுத்துகிறோம்.
உள்ளுர் அரசியலிருந்து மத்திய அரசியல் வரையில் ஒரு ஒழுக்கத்துடன் பயணிப்பதே முறையானதாக அமையும். கீழ் மட்ட அரசியலில் அபிவிருத்திக்காக அரச ஆதரவாளர்கள் பக்கம் சாய முடியும் என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. தமிழ் தேசியக் கட்சியினர் தமக்குள் ஏற்படும் முரண்பாடுகளுக்காக ஆளும் சிங்களப் பேரினவாத கட்சிகளுடனோ, அரசின் ஒத்தோடிகளுடனோ இணைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உள்ளுராட்சி மன்றத்திலிருந்து மாகாண சபை வரை தமிழ் தேசிய பற்றுதி கொண்ட சொல்லும் செயலும் நேர்மையானதாக கொண்ட அரசியலே தமிழர்களுக்கு தேவை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இதுபோன்ற வரலாற்று துரோகங்களை செய்பவர்கள், தமிழ் அரசியலில் பெரும் பின்னடைவையும் வீழ்ச்சியையும் சந்திக்க நேரிடும் என்பதை காலம் வெகுவிரைவில் உணர்த்தும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்…” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி – உரிமை