யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலைகளால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ஸ்ரீறிலங்கா அரசு பாசிசகரம் கொண்டு தனது முகவர்கள் மூலம் உடைத்து தகர்த்துள்ளது. இச் செயல் என்பது உலகத் தமிழர்களின் இதயங்களில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பேரவை வெளியிட்ட அறிக்கை “இக் கொடூர செயலுக்கு துணைபோன யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரின் செயல் என்பது உலகத் தமிழ் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் ரணத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மா பாதகச் செயலை புரிந்த ஸ்ரீலங்கா அரசு மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.
இவ் விடயம் தொடர்பாக இரு கோரிக்கைகளுடன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கும் யாழ் பல்கலை மாணவர்களுக்கும், போராட்டத்திற்கு துணைநிற்கும் அனைத்து கட்சிகளுக்கும், பொது அமைப்புகளுக்கும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதுடன் அனைத்து கட்சிகளின் பூரண கர்த்தாலுக்கு முழு ஆதரவை வழங்குகின்றது.
மேலும் இதுவரை கண்டனங்களை பதிவுசெய்த புலம்பெயர் அமைப்புக்களும், தொப்புள்கொடி உறவான தமிழக தலைவர்களும் எமது மாணவர்களால் முன்னேடுக்கப்பட்ட அறவழிப்போராட்டத்திற்கு தொடர்ந்தும் துணைநிற்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை உலகத் தமிழர்களின் அறவழிப் போராட்டங்களுக்கு துணை நிற்கும்..” என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.