இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதாவது, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 90 வயதான, கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நேற்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா நிமோனியா தாக்கம் இருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 60 வயதான ஆணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்புக்கும் கொரோனா நிமோனியா தாக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த 78 வயதான ஆணொருவர் கடந்த 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று அறிவிக்கப்பட்டது.
குறித்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், கொரோனா நிமோனியா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் கடந்த 13 ஆம் திகதி தமது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்புக்கும் கொரோனா தொற்றே காரணமென சுகாதார துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த தகவலுக்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 255 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக காணப்படுகின்றது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து 44 ஆயிரத்து 259 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 ஆயிரத்து 709 பேர், வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.