மட்டக்களப்பு, சித்தாண்டி பகுதியில் கால்நடை வளர்ப்போரினால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
உலகெங்கும் தமிழர்கள் நேற்று முன்தினம் பட்டிப்பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடிய அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் வீதிகளில் பொங்கல் பானைகளை வைத்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பேசுபொருளாக இருக்கும் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் கால்நடை வளர்ப்போர் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினையை தீர்த்துவைக்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.
சித்தாண்டி சந்தியில் ஒன்றுகூடிய கால்நடை பண்ணையாளர்கள், வீதிகளில் பொங்கல் பானைகளை வைத்து போராட்டத்தினை நடாத்தினர்.
வாழைச்சேனை- மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்தும் இதன்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தாங்கள் தமது கால்நடைகள் வளர்க்கமுடியாத வகையில் தங்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும், கால்நடைகள் கொல்லப்படும் சம்பவங்களும் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது ஒன்றிணைந்த பண்ணையாளர்கள் தமது நிலம் தமக்கு வேண்டும் என பல கோஷங்களுடன் கண்டன போராட்டத்தை முன்னெடுத்தனர்
இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அரியநேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.