கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர் இருவரால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் தீர்வின்றி தொடரும் நிலையில் கிளிநொச்சி தமிழரசு கட்சியினர் நேற்று ஆதரவு வழங்கியுள்ளனர்.
நேற்று பிற்பகல் 3 மணிமுதல் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கு வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், தமிழரசு கட்சி உறுப்ிபனர்கள் உள்ளிட்டோர் இணைந்து கொண்டனர்.
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்படும் உணவு தவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் இயங்கு நிலையில் இருந்த நிர்வாகத்தினரை இடைநிறுத்தி , புதிய இயக்குனர் சபை உறுப்பினர்கள் 05 பேர்களை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அவர்களினால் நியமனம் செய்தமைக்கு எதிராக சங்க அங்கத்தவர்களால் கடந்த 05.01.2021 ம் திகதி முதல் முன்னெடுத்த பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ந்து கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அவர்களினால் 04.01.2021 ம் திகதி நியமனம் வழங்கிய நிர்வாக உறுப்பினர்களின் நியமனம் இரத்து செய்தல் . சங்கத்தின் அங்கத்தவர்கள் , பணியாளர்கள் , அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதார நலன்களை கருதி சங்கத்தின் அபிவிருத்திக்கு தற்போதுள்ள இயக்குனர் சபையினை மீளவும் இயங்க வைத்தல் . சங்கத்தின் கிளைக்குழுத் தேர்தல் நடாத்தி பொதுச்சபையின் ஊடாக புதிய இயக்குனர் சபை ஒன்றினை தெரிவு செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை இருவரும் முன்னெடுத்து வருகிறார்கள்.
குறித்த போராட்டம் தீர்வு இன்றி இன்று ஆறாவது நாளாக தொடர்கின்றநிலையில் நேற்று குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழரசு கட்சி போராட்டத்தில் இணைந்து கொண்டது