Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே இது!

முல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே இது!

2 minutes read

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே என்.சிறிகாந்தா இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், பௌத்த விகாரை ஒன்றின் சிதைவுகள் காணப்படுகின்றன என்ற கண்டுபிடிப்பு ஒன்றின் பேரில் அங்கிருந்த இந்து ஆலயத்தின் ஐயனார் சூலத்தை அகற்றி விட்டு,கௌதம புத்தரின் சிலை ஒன்றை நிறுவி,தொல்லியல் திணைக்களம் ஆரம்பித்திருக்கும் அகழ்வு ஆராய்ச்சி நடவடிக்கைகள், தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடமாக அங்கீகரிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வரும் பௌத்த சிங்கள நில ஆதிக்க விஸ்தரிப்பு நிகழ்ச்சி நிரலின் இன்னுமோர் அம்சம் என்பது தெட்டத் தெளிவாக தெரிகிறது.

இராஜாங்க அமைச்சர் ஒருவர், கொழும்பிலிருந்து வந்து பாதுகாப்பு முஸ்தீபுகளுக்கு மத்தியில் பௌத்த மத அனுட்டானங்களோடுஆரவாரமாக ஆரம்பித்து வைத்துள்ள இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை, அரசாங்கத்தின் அதிகார அடாவடித்தனத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என்பதற்கு அப்பால், தமிழ் இனத்தின் மரபு வழித் தாயகமான வட,கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைப்பதன் மூலம் சிதைக்க முனையும் பேரினவாத அரசியற் சதித் திட்டத்தின் சமீபத்திய அதிரடி என்பதும் அப்பட்டமானதாகும்.

தமிழர்களின் மரபு வழி மண்ணில் முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வரும் பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக, தமிழ் இனத்தின் மத்தியில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் சமூக நடவடிக்கையாளர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய கூட்டுப்பொறுப்பை கொண்டிருக்கின்றார்கள்.

ஒன்றுபட்டதும், ஒருங்கினைக்கப்பட்டதும், தொடர்ச்சியானதுமான எதிர்ப்பு எமது மக்கள் மத்தியிலிருந்து எழ முடியுமானால், இந்த செயற்பாட்டை தோற்கடிக்க முடியும்.

எம் இன, மத உரிமைகள் சம்மத்தப்பட்ட உணர்வுபூர்வமான இந்த விவகாரத்தில், தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட, அரசாங்க சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிலரில், எவரும் மௌனம் காக்க கூடாது. இல்லையேல் அந்த மௌனம் சம்மதமாகவே அர்த்தப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More