அரசியல் மற்றும் நிர்வாகக் களங்களில் இராணுவத்தினரை அனுமதிப்பதன் ஊடாக ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகின்றது என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் ஆகிய அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
ஓய்வுபெற்ற மற்றும் பதவியிலிருக்கும் இராணுவ அதிகாரிகள் நிர்வாகப் பதவிகள், கட்சிப் பதவிகள் மற்றும் முக்கிய அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கை சிவில் நிர்வாக சேவையின் பெருமளவான முக்கிய பதவிகளுக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருவதாக பத்திரிகையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எம்மால் வெளியிடப்பட்ட அட்டவணையில், முன்னாள் இராணுவ அதிகாரியும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் முக்கிய அரச பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட 39 இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதுவொரு படிப்படியான பொறுப்பெடுத்தலாகும். அதுமாத்திரமன்றி, ஜனாதிபதியின் கைகளை அதிகாரமயமாக்கல், உறவினர் ஆதரவுக்கொள்கை, நண்பர்களுக்கு அதிகாரம் வாய்ந்த பதவிகளை வழங்குதல் மற்றும் நீதிமன்ற வழக்குகள் உள்ளவர்களை அரசாங்கப் பதவிகளுக்கு நியமித்தல் போன்றனவும் இடம்பெறுகின்றன. இது திருட்டுத்தனமான சதிக்கு ஒப்பானதாகும். இதனூடாக ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.