Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி எழுச்சிப் பேரணி!

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி எழுச்சிப் பேரணி!

2 minutes read

சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்தவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், “பெப்ரவரி நான்காம் திகதி தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கரிநாளாகும்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கப் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத் தீவு தமிழர்களின் மீது இனவழிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத் தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாளாகும்

1948இல் ஆட்சிபீடம் ஏறிய சிங்கள, பௌத்த ஆட்சியாளர்களால் பல இலட்சக் கணக்கான தமிழர்கள் உயிரிழந்தும் எஞ்யவர்களின் உரிமைகளையும், உடமைகளையும் அழித்தொழித்து தமிழர்கள் தமது சொந்த நிலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் அகதிகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மக்களுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் என்பது ஒரு அரசாங்கம் சார்ந்தோ அல்லது கட்சி சார்ந்தோ நடைபெற்றதல்ல.

சிறிலங்கா அரசு தமிழ் தேசத்தை அழித்து ஒட்டுமொத்த இலங்கைத் தீவையும் சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரித்தானதாக மாற்றியமைக்க முயற்சித்தபோது அதனை எதிர்த்து தமிழர் தமது அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆட்சிக்கு வந்த அனைத்து தரப்புக்களும் இலங்கைத்தீவு சிங்கள பௌத்த நாடு என்ற அடிப்படையிலேயே செயற்பட்டார்கள். இப்போதும் செயற்பட்டுக்கொண்டு உள்ளார்கள் .

2009இல் ஆயுத வழியில் நசுக்கப்பட்டு முடிவடைந்த போர் தமிழினப் படுகொலையோடு நிறைவுக்கு வந்திருந்தது. அத்தகைய தமிழினப் படுகொலை நடைபெற்றபோது அதனோடு நிகழ்ந்த பல குற்றங்களை மூடி மறைப்பதற்கு 2009 இல் ஆட்சியிலிருந்த அரசாங்கம் மட்டுமல்லாது சிங்கள தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்கத் தரப்புகளுமே முயன்றனர். அதே சூழலே இன்றும் உள்ளது.

தமிழர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறித்துவிட்டு சிங்கள தேசம் தனது 73ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு உள்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் தயாராகிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலைப்பாட்டில் தமிழர்களாகிய நாம் சுதந்திர தினத்தை புறக்கணித்து தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதியைப் பெறுவோம்.

பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால் முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையூடாகவே சாத்தியமாகும். அவ்வகையான சர்வதேச குற்றவியல் விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றமூடாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் விசேட தீர்ப்பாயம் ஒன்றினூடாகவோ சிறீலங்காவை உடன் விசாரிக்க வேண்டும்.

அந்தவகையில், இந்த இரண்டு பொறிமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலமேனும் பாதிக்கப்பட்ட மக்களாகிய எமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

இனியாவது சிறீலங்காவை விசாரிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பெப்ரவரி நான்காம் திகதி கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப் பேரணி நடத்த எமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி, வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில் காலை 8-30 மணிக்கு கந்தசுவாமி ஆலைய முன்றலில் பேரணி ஆரம்பமாகும். கிழக்கு மாகாணம் சமநேரத்தில், மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவைச் சென்றடையும்.

இப்பேரணிக்கு மத குருக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும் தங்களது ஆதரவை வழங்கி சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி சர்வதேச விசாரணைக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More