இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 146 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
குறித்த கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் அவர்களை விடுவிக்கவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
50 வருடங்களுக்கு மேலான காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 25 ஆண்டுகள் வரை தண்டனை அனுபவித்தவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டோரும் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சீர்திருத்தப் பள்ளிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமது தண்டனை காலத்தில் அரைவாசி பகுதியை கழித்தவர்களுக்கும் விடுதலை வழங்க திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பாலித்த சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் மற்றும் கிறிஸ்மஸைக் கருத்திற்கொண்டு ஓகஸ்ட் 31 நவம்பர் 20 மற்றும் ஜனவரி 08 ஆகிய திகதிகளில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின மன்னிப்பின்போது விடுவிக்கக் காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சிறைத் துறை அறிவித்துள்ளது.