Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொத்துவில் 2 பொலிகண்டி பேரணிக்கு வலுச்சேர்ப்போம்!

பொத்துவில் 2 பொலிகண்டி பேரணிக்கு வலுச்சேர்ப்போம்!

2 minutes read

பொத்துவில் – முதல் பொலிகண்டி வரையான பேரணிக்கு நாம் முழுமையான ஆதரவை வழங்கியிருக்கும் நிலையில், இன்றைய தினம் கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அண்மையில் பேரணியுடன் இணைந்துகொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் நீலாதேவி தெரிவித்தார்.

தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறியுமாறு வலியுறுத்தி முதன்முதலில் கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தமையால் கிளிநொச்சியை முன்நிலைப்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக்கோரியும் நீதியைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டுவரும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணிக்கு எமது அமைப்பும் ஆதரவு வழங்கியுள்ளது. 

எனவே இன்றைய தினம் அந்தப் பேரணி டிப்போ சந்தியை அடையும் போது, அப்பேரணியில் எமது அமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் சிலர் இணைந்துகொள்வார்கள்.

அதேவேளை நாம் சுதந்திர தினத்தைக் கரிநாளாகக் கருதி நாம் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். அதன்போது வெளியிட்ட ஊடக அறிக்கையின் மொழிபெயர்ப்பை சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்கும் ஐ.நா அலுவலகத்திற்கும் அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு எமது அமைப்பின் சார்பில் குறைந்தபட்சம் இருவரை அனுப்பிவைப்பதற்குத் திட்டமிட்டிருந்தோம். 

எனினும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் தீவிரமடைந்துவரும் நிலையில், அது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஆகவே ஜெனிவாவிற்கு செல்ல முடியாத நிலையேற்படுமாயின், இணையவழி மூலம் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

அத்தோடு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 

‘காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்தகால ஜெனிவா அமர்வுகளின்போது பல தடவைகள் எடுத்துக்கூறியிருக்கின்றோம். 

அந்த அலுவலகம் இராணுவத்தரப்பில் காணாமல்போனவர்களைக் கண்டறிவதற்கும் அதனூடாக ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றுவதற்கும் உருவாக்கப்பட்டதாகும். 

காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களை விடவும் மோசமானதாகவே காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More