இலங்கையின் எல்லை பாதுகாப்பில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் மிகவும் அவசியம். ஆகவே அதனை கட்டாயம் பெற்றாக வேண்டும் என விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன தெரிவித்தார்.
இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இலங்கையில் இடம்பெற்று வரும் விமானப்படை கூட்டு கண்காட்சிகள் குறித்தும் இந்திய விமானப்படையை இணைத்துக்கொண்டமைக்கான காரணம் குறித்தும் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் விமானப்படை பலவீனமானது என்பதே உண்மையாகும். எமது தாக்குதல் சக்தி 20 வீதத்திற்கும் குறைவானதாகும்.
மேலும், இலங்கையின் பிராந்திய நாடுகளாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பசுபிக் எல்லையில் பலமான அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புகள் எமக்கு கிடைத்து வருகின்றது. எனினும் இலங்கையின் எல்லையை பாதுகாக்க வேண்டுமானால் இந்தியாவுடன் இணைந்தே செயற்பட வேண்டும்.
அவுஸ்ரேலியாவும் கடல் எல்லை பாதுகாப்பில் எம்முடன் இணைந்து செயற்படுகின்றது. அதேபோன்று இந்தியாவின் ஒத்துழைப்புகள் எமக்கு வேண்டும்.
இதேவேளை இலங்கையின் விமானப்படை, கடந்த காலங்களில் பலவீனமாக காணப்பட்டது. எனினும் இப்போது அரசாங்கம் புதிய வேலைத்திட்டங்களை உருவாக்கி விமானப்படைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.