அஸ்ட்ராசெனக்கா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
இதன்படி, இரண்டாவது டோஸின் தடுப்பூசித் திட்டம் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் தொடங்கும் எனவும் மூன்று இலட்சம் டோஸ் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி இரண்டாவது டோஸுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, ஏப்ரல் 19 முதல் ஜூன் 30 வரை நடைபெறும் என தெரிவித்தார்.
அத்துடன், இந்தியாவில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டுள்ள அஸ்ட்ராசெனிக்கா தடுப்பூசிகளும் கொவாக்ஸ் திட்டத்திலான மீதமுள்ள தடுப்பூசிகளும் இந்த காலகட்டத்தில் பெறப்பட்டுவிடும் எனவும் அவர் கூறினார். அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸை வழங்குவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.