இலங்கை கொரோனா தொற்றை கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் சில கவனக்குறைவு காரணமாக மீண்டும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. ஆனாலும் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று இலங்கையில் மாத்திரமல்ல உலகக்கிலும் தற்போது பாரிய அச்சசுறுத்தலை ஏற்படுத்தி வருவதுடன் சில நாடுகளில் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவையும் குறிப்பிடலாம் என்றார்.
வவுனியாவிற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து பரவுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தாலும் கூட விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களை கட்டுப்படுத்தி இருப்பதால் அது குறைக்கப்பட்டுள்ளது. இத்தொற்றை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முழுமையாக முடக்குவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது நாடு மட்டுமல்லாது அனைத்து நாடுகளுமே தங்களது நாட்டினை முடக்கும் நிலைக்கு உட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாத்திரமே அந்த அரசாங்கங்கள் முடக்கி வருகின்றன. அவ்வாறு நாட்டினை முடக்கும் சந்தர்ப்பத்தில் நாடு பட்டினியில் மரணிக்க வேண்டி வரும். அதற்காகத்தான் எமது அரசாங்கம் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை பேணுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இராணுவ சோதனைச் சாவடிகளில் இராணுவத்தினர் முகக்கவசம் அணியாதவர்களை மறித்து அணிந்து செல்லுமாறு அறுவுறுத்தி வருகின்றனர். மேலும் இராணுவச்சோதனை சாவடிகள் இவ்வாறான தேவைப்பாடுகளுக்கு வசதியாக இருப்பதுடன் நாங்கள் அதனை வசதியாக மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அதனை கெடுபிடி என்று நோக்கக்கூடாது.
ஆகவே சோதனைச் சாவடி இருப்பதால் முகக்கவசம் அணிய வேண்டும் என அனைவரும் கவனமாக இருப்பார்கள். அத்தோடு சோதனைச் சாவடிகளை நிரந்தரமாக்க வேண்டிய தேவை இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.