இலங்கை தமிழ் மக்கள் நலன் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்தும் அக்கறை செலுத்துமென தமிழகத்தின் மீன்பிடித்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சராக பதிவியேற்றுள்ள அனிதா ஆர். இராதாகிருஸ்ணன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் நேற்று பதவியேற்றது. தமிழகத்தின் புதிய மீன்பிடித்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஸ்ணனுடன் தொலைபேசி ஊடாக உரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கடற்றொழிலாளர் சார்பான விவகாரங்களில் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமெனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவரிடம் தெரிவித்தார்.
இதன்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த அனிதா ஆர். இராதாகிருஸ்ணன், இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்தும் அக்கறை செலுத்தி வருவதாகவும் எதிர்காலத்திலும் இலங்கை தமிழ் மக்களின் நலன்களில் தி.மு.க. அக்கறை செலுத்துமெனவும் தெரிவித்துள்ளார்.