பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம் !!
சென்னை : புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்,
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2016 ல் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பதவியேற்று இறுதியாண்டை பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியை இழந்துள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து ஆளுநராக இருந்த கிரண்பேடி மூலம் கடுமையான நெருக்கடிகளை சந்தித்த நிலையிலும் துணிவுடன் அத்துனை சவால்களையும் எதிர்கொண்ட நிலையில், சொந்த கட்சி எம்.எல்.ஏ க்களின் ராஜினாமா மூலம் ஆட்சியை இழந்துள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி, நாட்டின் ஜனநாயக அமைப்பை கேலிக்கூத்தாக்கி, குதிரை பேரம் மற்றும் குறுக்கு வழி அரசியல் மூலம் கவிழ்ப்பது என்பது மறுக்க முடியாத ஜனநாயகப் படுகொலை. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.
பாரதீய ஜனதா கட்சியை பொருத்தவரை மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தாலும், பல்வேறு மாநிலங்களில் இது போன்ற கீழ்த்தரமான அரசியலை அரங்கேற்றி குறுக்கு வழியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை நாடறியும். அதன் தொடர்ச்சி தான் புதுச்சேரியில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு. இது போன்ற ஜனநாயக படுகொலை தலைதூக்காமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழகத்திலும் இது போன்ற அருவருக்கத்தக்க அரசியலை முன்னெடுக்க பாஜக முயற்சி செய்யும். எனவே நாட்டின் ஜனநாயக அமைப்பை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஓரணியில் ஒன்று திரண்டு பாஜகவின் மலிவான அரசியல் யுக்தியை எதிர்த்து களமாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.