அ. தி. மு. க கூட்டணியிலிருந்து விலகியது ஏன்? என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமார் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவரான கமலஹாசன் அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் சரத்குமார் தெரிவித்ததாவது, ‘அ. தி. மு. க கூட்டணியுடன் கடந்த 10 ஆண்டுகளாக பயணித்தோம். எங்களுக்கு என ஒரு மரியாதையும், வாக்கு விகிதாச்சாரம் இருக்கிறது என்பதால் தான் கூட்டணி அமைத்திருந்தனர்.
மதிப்பில்லாமல் யாரையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தற்போது தேர்தல் நெருங்குகிறது. ஆனால் அ. தி. மு. க விலிருந்து கூட்டணி குறித்து யாரும் அதிகாரபூர்வமாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தொடர்ந்து பயணித்தவர்களை அழைத்து பேசி இருக்கலாமே.. ஆனால் இதுவரை அவர்கள் அழைத்து பேசவில்லை.
மக்களுக்காக நாம் சேவை செய்ய வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதாலும், கூட்டணி குறித்து முறையாக அதிகாரபூர்வமான அழைப்பு வராததாலும் அ. தி. மு. க கூட்டணியில் இருந்து விலகினோம்.
நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள் ஒன்றாக இணைந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியதால் கமலுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறோம். கமல்ஹாசனிடமிருந்து தேர்தல் கூட்டணி தொடர்பாக நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்பது தீர்மானிக்கப்படும். ‘ என்றார்.
பணத்தை வாங்கிக் கொண்டு யாரும் வாக்களிக்காதீர்கள். இந்த ஒரு முறை பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்க மாட்டோம் என்று அனைவரும் உறுதியான முடிவினை மேற்கொள்ள வேண்டும் என நடிகர் சரத்குமார் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.