சட்டப்பேரவைத் தேர்தலில் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஏப்ரல் 6 ஆம் திகதியன்று சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் நடைபெறுகிறது.
இதில் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், தி.மு.க தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் போட்டியிடுகிறது.
இந்த இரண்டு கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடையும் நிலையில் இருக்கிறது.
இதைத்தொடர்ந்து கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைத்தன. இந்தக் கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் இறுதியில் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகளும், பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாட்டில் கைச்சாத்திடப்பட்டது. இதனை அடுத்து எஞ்சியுள்ள 154 தொகுதிகளிலும் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் போட்டியிடுகிறது.
கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே தற்போது உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பங்குபற்றிய கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் எட்டு சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்திற்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் மக்கள் நீதி மய்யம் ஈடுபட்டது. காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதி உடன்பாட்டில் முரண்பாடு நிலவியதால் அக்கட்சி மீண்டும் திமுக கூட்டணிக்கே திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.