234 தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மதியம் 3 மணி முதல் 5 மணி வரை சற்று வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம்.
காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். சில இடங்களில் வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சற்று நேரமானது. சில இடங்களில் அதிமுக- திமுக தொண்டர்கள் மோதிக்கொண்டனர். சில இடங்களில் பூத் சிலிப் உடன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இருந்தாலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 13.80% வாக்குகள் பதிவாகியிருந்தது. 11 நிலவரப்படி 26.29% வாக்குகளாக அதிகரித்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 39.61% சதவீதமாக இருந்தது. மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% சதவீதமாக உயர்ந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மதியம் 3 மணி வரை இரண்டு மணி நேர இடைவெளியில் சராசரியாக 13 சதவீத வாக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 3 மணியில் இருந்து 5 மணி வரை 10.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
சென்னையில் 49.95 சதவீத வாக்குகளும், நாமக்கல்லில் அதிகபட்சமாக 74.99 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. திருநெல்வேலியில் 60.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
0