அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப் தனது கடைசியுரையில் மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் உரையாற்றியுள்ளார்.
அதில், “நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஆர்வமாக இருங்கள், ஆனால் வன்முறை ஒருபோதும் பதில் அல்ல, வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 6 ஆம் திகதி, ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் முக்கியமான சம்பிரதாயம் ஒன்றில் அமெரிக்க பாராளுமன்றம் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவை மாற்ற வேண்டும் என்றும், ட்ரம்ப் தான் வெற்றி பெற்றார் என்றும் வலியுறுத்தி அவரது ஆதரவாளர் கும்பல் பாராளுமன்றம் அமைந்துள்ள கபிட்டல் கட்டிடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுப்பட்டனர்.
இந்த வன்முறையில் ஒரு பொலிஸ் அதிகாரி ,ஒரு விமானப்படை வீரர் மற்றும் ட்ரம்ப் ஆதரவாளர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
காணொளியில் தனது உரையை வெளியிட்ட மெலானியா மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளைப் பரப்பும் நெட்டிசன்களைக் கண்டித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததோடு, “தாதியர்கள், மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்கள் ,பலரைக் காப்பாற்ற உழைக்கும் அத்தனை பேருக்கும் ” நன்றி தெரிவித்தார்.
பல இலட்சம் உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்றும் மெலனியா ட்ரம்ப் கூறினார்.
பெற்றோர் குழந்தைகளைப் படிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அமெரிக்காவின் சுதந்திரமும் வீரமும் மிக்க வீரர்களின் வரலாற்றை போதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஒரே குடும்பத்தைப் போல நாம் எதிர்கால தலைமுறைக்காக போராடுவோம் என்றும் மெலானியா ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.