முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கினார்.
ஜோ பைடன் கடந்த புதன்கிழமை அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.
அதன் பின்னர் அவர் ஜனாதிபதியானதும் அடுத்த 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என தனது முதல் உத்தரவை பிறப்பித்தார்.
இந்த நிலையில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்திலேயே ஜனாதிபதி ஜோ பைடன் பொது வெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றினார்.
புதன்கிழமை மாலை வொஷிங்டனில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் நினைவிடத்துக்கு சென்ற ஜோ பைடன் முகக்கவசம் அணியாமல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது.
இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எனினும் உடனடியாக ஜோ பைடன் முகக்கவசம் அணிந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முகக்கவசம் அணிவது பற்றி ஜனாதிபதி ஜோ பைடன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘‘முகக்கவசங்கள் அணிவது ஒரு பாகுபாடான பிரச்சினை அல்ல. இது எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றக் கூடிய ஒரு தேசபக்திச்செயல். எனவே தான் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தேன்’’ என அதில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.